ஒரு மாத இடைவெளிக்குப் பின் சிரியா அதிபர் பசார் அல்- அசாத் அரசு செய்தித் தொலைக்காட்சியில் தோன்றினார்.
கடந்த மாதம் அரச எதிர்ப்புப் படையினரின் தாக்குதலில், பாதுகாப்புத்துறை அமைச்சரும், 3 உயரதிகாரிகளும் கொல்லப்பட்ட பின்னர் அதிபர் அசாத் டி.வி.யில் தோன்றுவது இதுவே முதல் முறை.
துணை அதிபரும் வெளியேறினார்? சிரியா துணை அதிபர் பரூக் அல்-சாரா அரச எதிர்ப்புப் படையினருக்கு ஆதரவாக வெளியேறிவிட்டதாகக் கூறப்படும் தகவலை சிரியா அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், சிரியாவில் உள்ள ஐ.நா. பார்வையாளர்கள் சிரியாவில் இருந்து திரும்புகின்றனர்.
துணை அதிபர் பரூக் அல்-சாரா நாட்டை விட்டு வெளியேறவோ, வேறெங்கும் செல்லவோ ஒருபோதும் நினைத்ததில்லை என, அரசு டி.வி.யான அல்-அரேபியா தெரிவித்துள்ளது. ஆனால், 30 ஆண்டுகளாக உயர் பொறுப்பில் உள்ள பரூக் அல்-சாரா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிரியாவை விட்டு வெளியேற முயன்றது உண்மை. சில உயரதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளனர் என எண்ணெய்த்துறை முன்னாள் துணை அமைச்சர் அப்தோ ஹுசமத் தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஜெர்மன், பிரிட்டன்: சிரியா படைகளின் நடமாட்டம் குறித்து, சைப்ரஸ் அருகே உள்ள பிரிட்டன் ராணுவப் பாசறையில் இருந்து பிரிட்டன் புலனாய்வுத் துறையினர் துருக்கி வழியாக, கிளர்ச்சியாளர்களுக்குத் தகவல்கள் தந்து உதவுவதாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் “தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெர்மன் உளவுத்துறை கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக தகவல்களைப் பரிமாறி வருவதாக, ஜெர்மனில் இருந்து வெளியாகும், “பில்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
சிரியாவின் கடலோரப்பகுதிகளில் உலவும் ஜெர்மன் கப்பல்களில் உள்ள நவீன வசதிகள் மூலம், தரைப்பகுதியில் 600 கி.மீ., தூரம் வரையுள்ள படையினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் ஜெர்மன் உளவுத்துறை (பிஎன்டி), அந்த தகவல்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கின்றனர்