பிரபல சமூகசேவையாளரும் ,சமாதான செயற்பாட்டளாரும், ரிபிசி இயக்குனர்களில் ஒருவரும், பாரிஸ்டருமான உப்பாலி குரோ அவர்கள் வெள்ளிக்கிழமை 21-08-09 அதிகாலை லண்டன் மருத்துவமனையில் காலமானார்.
இவர், இலங்கையில் உள்ள இடதுசாரி தலைவர்களுடனும் தொழிற்சங்கவாதிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் சர்வதேச ரீதியாக நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தவர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுமல்லாமல், அது தொடர்பாக பல கட்டுரைகளை த ஜலண்ட ,ஏசியன் ரிபுன் , லங்கா கார்டியன் , தமிழ் வீக்.ஆகிய இணையத்தளம் போன்றவற்றிலும் தொடர்ச்சியாக இனவாதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் யுத்த வெற்றியினை புகழ்ந்து அவருடைய பெறாமகன் ஒருவர் உப்பாலி குரோக்கு எழுதிய கடிதத்திற்கு யுத்தத்தின் தாக்கங்களையும், அதன் ஊடாக வேதனை அனுபவித்த தமிழ்மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தி எழுதிய பதில் கடிதத்தினை, பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் தமது இணையத்தளமான தமிழ் வீக் இணையத்தளத்தில் வெளியிட்டதன் ஊடாக நுற்றுக்கணக்காண இளைஞர்கள் வெளியிட்ட கருத்துக்கள் உப்பாலி குரோக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்தது.
இவர் லங்கா சமசமாஜ கட்சியின் ஆரம்ப கால உறுப்பினருமாவார்.