Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமத்துவம் சமதர்மம் பேசும் இங்கிலாந்து அரசின் காவல்துறையினர். ஆக்கம்:இக்பால் செல்வன்

உலகெங்கும் சமத்துவம் காண புதிய சிந்தனையாளர்களுக்கும் பழைமைவாதிகளுக்குமான போராட்டமே உலகெங்கும் நடந்து வருகின்றது. ஒவ்வொரு இடத்தில் நடைபெறும் ஒவ்வொரு முரண்களும் புதுமைக்கு பழமைக்கு இடையிலான ஒரு யுத்தமாகவே கருத முடியும். பல இடங்களில் பழமைவாதிகளின் கைகளே ஓங்கி இருக்கின்றது என்பது வேதனையான உண்மை. குறிப்பாக காலம் காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வருவோர் தமக்கான உரிமைகளை கோரியும் சமத்துவமான உலகை கட்டியெழுப்பவும் எந்தவித பலனையும் எதிர்பாராமல் உண்மைக்காக பல இன்னல்கள் மத்தியிலும் போராடி வருகின்றார்கள். அவர்கள் சமத்துவ உலகை கட்டியெழுப்ப அனைத்தையும் இழக்கத் துணிந்துள்ளனர்.
அந்த வகையில் அண்மையக் காலமாக பழமைவாதிகளின் கால்களை நக்கி வரும் அரசுகளையும், அமைப்புகளையும் எதிர்த்து ஃபெமன் என்ற பெண்கள் அமைப்பு கடுமையான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றார்கள். அவர்களின் போராட்டத்தின் ஒரு அங்கமாக ஒலிம்பிக் திடலுக்கு அருகே ஃபெமன் அமைப்பைச் சார்ந்த ஐந்து பெண்கள் மானத்தையும் துச்சமென மதித்து தமது மார்புத் திரைகளை விலக்கி ஒலிம்பி அமைப்புக்கு எதிராக தமது போர் கொடியினைத் தூக்கியுள்ளார்கள்.
அனைத்துலக ஒலிம்பிக் சம்மேளனத்தின் அண்மையக் கால நடவடிக்கைகள் ஒலிம்பிக் விளையாட்டின் அடிப்படைக் கொள்கைகளான சமத்துவத்தை குப்பை எறிந்துள்ளன. பழமைவாதிகளில் மிகவும் கடும்போக்கான இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வேதமான ஷரியா எனப்படும் இஸ்லாமிய பழமைவாத சட்டங்களை ஒலிம்பிக் போட்டிகளிலும் நுழைத்து வருகின்றன எண்ணெய் வளங்களை வைத்துக் கொண்டு பரமபதம் ஆடிவரும் இஸ்லாமிய நாடுகள்.
தமது நாடுகளில் பெண்கள், பாலியல் சிறுபான்மையினர், நாத்திகர்கள், இதர சிறுபான்மையினர் மீது நடத்தும் கொடூரங்களை மறைக்க இஸ்லாமிய நாடுகள் முற்போக்கு மாற்றங்களை நிகழ்த்தி வருவதாக பாவ்லா காட்டுகின்றன. அதன்படி பேருக்கு பெண்களில் ஒரு சிலரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிவிட்டு அதனூடாக இஸ்லாமிய ஷரியாவை ஒலிம்பிக் போட்டிகளிலும் நுழைக்க முற்படுகின்றன இந்நாடுகள். இது ஒலிம்பிக் போட்டியின் அடிப்படை குணங்களான அமைதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு முரணானவையாக இருக்கின்றன. இதற்கு IOC-யும் எண்ணெய் வளங்களுக்காக எதனையும் செய்யத் துணிந்துள்ள மேற்கத்திய அரசுகளும் துணைப் போகின்றன.
” IOC அடிப்படைவாத இஸ்லாமியர்களோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தால், நாளை கல்லடிகளும், கற்பழிப்புகளும் கூட ஒலிம்பிக் போட்டிகளாகி விடும் ” என்றனர் அந்த அமைப்பாளர்கள்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அப்புறப்படுத்த சமத்துவம் சமதர்மம் பேசும் இங்கிலாந்து அரசின் காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் கடுமையாக அவர்களை அடித்து உதைத்து கைது செய்துள்ளனர். ஆனால் இதே இங்கிலாந்து காவல்துறையினர் மதத்தின் பெயரால் தீவிரவாதச் செயல்களிலும், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கைவைக்கவும் பயப்படுகின்றது.
காவல்துறையின் அடாவடித்தனத்தை அங்கிருந்த ஃபெமென் அமைப்பின் ரெசா மொராடி தனது காமெராவில் பதிவு செய்துள்ளார்.
” பிரித்தானிய காவல்துறையே ! இஸ்லாமிய ஒழுக்கத்தை நிலைநிறுத்தியமைக்காக இரான், சௌதி அரேபியா ஆஃபாகானிஸ்தான் போன்ற நாடுகள் உம்மை உச்சிமுகர்ந்து பாராட்டும் ” என கோசங்களை எழுப்பினர் போராட்டக் குழுவினர்.
” இருப்பத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் சமத்துவம் என்றால் என்னவெனத் தெரியாமல் பாலியல் வெறித்தனத்தை ஊட்டியும் மனிதனை மனிதன் கல்லால் அடித்துக் கொல்லும் சட்டங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு ஒலிம்பிக் சமூகம் சிவப்புக் கம்பள வரவேற்பினைக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் உண்மைக்கும் சமத்துவத்துக்கும் போராடும் பெண்கள் உரிமை அமைப்புக்களை துச்சமென மதித்து அடித்து உதைத்து தமது காவாலித் தனத்தைக் காட்டியுள்ளது.
கவலை வேண்டாம், எமக்கான காலம் வெகுதொலைவில் இல்லை ” என போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான மரியம் நமாஸி தமது வலையில் குறிப்பிட்டுள்ளார்.
ஃபெமன் அமைப்பு அண்மையக் காலமாக பெண்கள் உரிமைக்காக கடுமையான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றன. உக்ரேனில் கால்பந்து விளையாட்டு என்ற பெயரில் பாலியல் தொழிலை ஊக்குவித்து வரும் அரசினை எதிர்த்து கடந்த மே மாதம் ஒரு போராட்டம் நிகழ்த்தினார்கள்.
அதே போல உக்ரேன் நாட்டில் கற்பகலைப்பினைத் தடுக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து மார்பு திறந்து போராட்டம் நிகழ்த்தினார்கள்.
துருக்கியில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்கொடுமைகளைக் கண்டித்து அரைநிர்வாணப் போராட்டம் நிகழத்தியமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடிப்படைவாத நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த பெண்களே ஃபெமன் போராட்டத்தில் அதிகமாக பங்கு கொண்டு வருகின்றனர். அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அமைப்பின் உறுப்பினரும் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட சுண்டாஸ் ஹூரைன் என்ற பெண்மணி ஒரு சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் அனைத்துலக ஒலிம்பிக் சம்மேளத்தின் இரட்டைவேட நிலை கவலை அளிப்பதாக கூறினார். இனவெறி பரப்பைய தென்னாப்பிரிக்காவை புறக்கணித்த சர்வதேச சமூகம். பாலியல் இனவெறி பரப்பி வரும் அடிப்படைவாத நாடுகள் முன் மண்டியிட்டு கிடப்பதேனோ என்றக் கேள்வியை முன்வைத்தார். சௌதி அரேபியா இரண்டு பெண்களை ஒலிம்பிக்கு அனுப்பிய போதும், பெயரளவில் மட்டுமே அது இருந்தது எனவும். அவர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், விளையாட்டில் சுதந்திரமாக பங்கேற்கவும் தடையாக சட்ட திட்டங்களை கூறியதேனோ எனவும் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version