Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதி துரோகி : வை.கோ பேட்டி

கேள்வி : பிரபாகரனுக்கு ஏதாவது நேரிட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றீர்கள். இன்னும் அந்தக் கருத்தில் நிலையாக இருக்கிறீர்களா?

வைகோ : எப்போதுமே நான் சொன்னதிலிருந்து பின் வாங்கியதில்லை. முழுமையாக உணர்ந்த பிறகே நான் எதையும் பேசுவேன். தமிழர்களைப் பொறுத்தவரை பிரபாகரன் ஒரு மேதை. பிரபாகரனுக்காக தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்ள பலர் தயாராக இருக்கிறார்கள். ஜனவரி மாதம் முதல் இதுவரை ஈழப் பிரச்சினைக்காக 12 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான், பிரபாகரனுக்கு ஏதாவது நேரிட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றேன். பிரபாகரனுக்கு ஏதாவது நேரிட்டால் அவர் மீது பாசம் கொண்டவர்கள் தங்களது நரம்புகளை வெட்டிக் கொள்ள நேரிடும். இதனால் ரத்த ஆறு ஓடும்.

எனது வார்த்தைகள் ஒரு பேச்சின் வெளிப்பாடுதான். அதற்கு மேல் எதுவும் இல்லை. கருணாநிதி இதே போல நிறைய முறை பேசியுள்ளார். எரிமலையாக வெடித்துச் சிதறுவோம் என்று கூறியுள்ளார். ஒரு எரிமலை வெடித்தால் உயிரிழப்பு ஏற்படாதா. தனது 15 ஆண்டு கால வரலாற்றில் மதிமுக ஒருபோதும் வன்முறையில் இறங்கியதில்லை. எனது தொண்டர்கள், மிக மிக ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடானவர்கள்.

கேள்வி : ஈழப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா?

வைகோ : எங்களது கனவிலும் கூட யாருக்கும் தீங்கிழைக்க நாங்கள் நினைத்ததில்லை. வட இந்தியர்களை எங்களது சகோதரர்களாக, சகோதரிகளாகத்தான் நாங்கள் நினைக்கிறோம். காங்கிரஸ் கட்சிதான் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. வட இந்தியர்கள் இதற்குக் காரணமல்ல. கருணாநிதிதான் முக்கிய குற்றவாளி. அவர்தான் துரோகி நம்பர் ஒன். மக்களின் கோபமெல்லாம் இதுபோன்ற துரோகிகள் மீதுதான். வட இந்திய மக்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. நாங்கள் அமைதியை விரும்பும் மக்கள்.

கேள்வி : முதல்வர் கருணாநிதி உங்களது குருவாக இருந்தவர். இப்போது துரோகி என்கிறீர்கள். இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

வைகோ : விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதால், விடுதலைப் புலிகளிடமிருந்து நாங்கள் பணம் பெறுகிறோம் என்று கூறி எங்களை களங்கப்படுத்த முயற்சித்தவர் கருணாநிதி. ராஜபக்சேவை புகழ்ந்து பேசியவர் கருணாநிதி. அலெக்சாண்டர் என்ற மாவீரனோடு ராஜபக்சேவை ஒப்பிட்டுப் பேசியவர் கருணாநிதி. இதனால்தான் அவரை நான் துரோகி என்கிறேன்.

கேள்வி : எந்த அடிப்படையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்?

வைகோ : ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைவர் சோனியா காந்திதான். கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை அளித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய மேற்பார்வையில்தான் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் பட்டு வரும் இன்னல் குறித்து சோனியா காந்தி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆயிரக்கணக்கில் உயிரிழந்த பிறகும் கூட அவர் எதுவுமே பேசவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, ஏன் ஐ.நா.வே கூட இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறபோது ஏன் இந்தியா அப்படி ஒரு கோரிக்கையை வைக்காமல் உள்ளது? தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி துரோகி நம்பர் ஒன் ஆகி விட்டார்.

கேள்வி : ஈழப் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காவிட்டால் சோவியத் யூனியன் போல இந்தியா சிதறுண்டு போகும் என சமீபத்தில் கூறினீர்களே?

வைகோ : இந்திய அரசை எச்சரிக்கும் வகையில்தான் நான் அப்படிச் சொன்னேன். சோவியத் யூனியன் ஒரே நாடாக இருந்தது ஆனால் ரஷ்யாவின் ஆதிக்கம் காரணமாகவே அது சிதறிப் போனது. இங்கிலாந்துக்காரர்கள் இந்தியாவுக்கு வருவற்கு முன்பு இந்தியா என்ற நாடாக நமது நாடு இல்லை. இந்தியாவின் ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். அது தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் காங்கிரஸ் அரசு, தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கும் இனவாத இலங்கை அரசுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்துக் கொண்டிருந்தால், இந்தியாவில் உள்ள தமிழர்களின் மனங்களில் பிரிவினைவாத விதைகள் தூவப்பட ஏதுவாகி விடும். அதன் பின்னர் இந்தியாவின் ஒருமைப்பாடும், ஒற்றுமையும் கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-டெஹல்கா இதழுக்கு வழங்கிய பேட்டி

Exit mobile version