Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாவிற்கு எதிராக மாதகல் மக்கள் அடிப்படை உரிமை மீறல் மனு

2009ஆம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் தாங்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லவோ சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ அனுமதிக்கப் படவில்லை. மாறாக வலிகாமம் பலாலி படைத்தளத்துக்கு வெளியேயுள்ள மக்களது நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி சுற்றிவேலி அடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்பிரவேசிக்கலாகாது என்ற அறிவித்தலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாதகல் மேற்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள், நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மோகான் பாலேந்திரா ஊடாக தங்கள் சார்பிலும் அந்தப் பகுதிப் பொது மக்களின் நலன் சார்பிலும் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெட்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியவர்களை அவர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version