Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலன்னாவையில் ஆளுங்கட்சிக்குள் மோதல்! ஜனாதிபதி ஆலோசகர் பலி

ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர கொலன்னாவையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் அவரது பாதுகாவலரும் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பாதுகாவலர்களே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். அதன்போது படுகாயமுற்ற பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான துமிந்த சில்வாவும் படுகாயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய தலையில் தற்போது சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலன்னாவை உள்ளாட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே இருதரப்பினரும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் நீண்டகாலமாக கடும் பகை நிலவி வந்தது. அதன் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version