கிழக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.
எனினும் கட்சியின் இந்த முடிவுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் நெருக்கடியில் இருந்தார்.
கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 12 ஆசனங்களை ஒதுக்கித் தர முடிவு செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, அமைச்சர்களான அலாவுல்லா (தேசிய காங்கிரஸ்), ரிசாத் பதியூதின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான ஆசனம் 11ஆக குறைக்கப்பட்டது.
இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நெருக்கடியில் விழுந்தது. எனினும் இது குறித்து இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததை அடுத்து கிழக்கு மாகாணத்தில் தனியாக மரச் சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.