Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கில் ஆயுதக் குழுக்கள் இருக்கும் வரை ஜனநாயகம் இல்லை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் .

28.10.2008.
கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இருக்கும் வரையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாதென நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்கள் ஆயுத முனையில் ஆர்பாட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் பலவந்தமாக பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பலவந்தமாக பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் வலியுறுத்தி வருகின்ற போதிலும், இவ்வாறான சம்பவங்களின் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்குக் காணப்படும் அர்ப்பணிப்புக் குறித்து சந்தேகம் எழுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோலாவில், பனங்காடு, தாம்பாட்டி மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பலவந்தமாக பேரணிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் போது தமிழ் மக்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட பல முன்னணி மனித உரிமை நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பித்தக்கது.

கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் ரொஸ் வலியுறுத்தியுள்ளார்.
http://www.globaltamilnews.com/

Exit mobile version