Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காட்டுமிராண்டி ராஜபக்ச – விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் : தொல். திருமாவளவன்

 இலங்கை யுத்தம் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய யுத்தம் மட்டுமல்ல பெரும் வணிக நிறுவனங்கள் நடத்திய யுத்தமாகும் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சென்னையில் தெரிவித்தார். இந்திய பெரு நிறுவனங்கள் இலங்கை நோக்கி மேலதிக பணம் திரட்டுவதற்காகப் படையெடுக்கின்றன. தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மட்டும் தான் இந்த யுத்ததை நிறுதியிருக்க முடியும் ஆனால் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள் என்று  எழுத்தாளரும் ஆர்வலருமான  அருந்ததி  ராய் தெரிவித்திருக்கும்  அதே வேளை  திருமாவளவன்  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

விபரம்  வருமாறு:

சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 8Š6Š2010 அன்று இந்திய ஆட்சியாளர்களைச் சந்திப்பதற்காக புதுடில்லி வருவதாகத் தெரிகிறது.

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களைப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த மனிதநேயமில்லாத காட்டுமிராண்டி ராஜபக்ச, அந்தப் பேரவலம் நடந்து முடிந்து ஓராண்டு ஆன நிலையிலும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவோ அப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உருவாக்கவோ சிறிதும் முனைப்புக் காட்டவில்லை.

கடந்த சனவரி மாதத்திற்குள்ளாக வவுனியாவில் உள்ள வதைமுகாம்களிலுள்ள அனைவரையும் விடுவித்து அவரவருக்கான சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்யப் போவதாகவும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவேற்றப் போவதாகவும் இந்திய அரசுக்கு வாக்குறுதி அளித்த ராஜபக்ச, அவற்றை நிறைவேற்றுவதற்கு எள்முனையளவும் அக்கறை காட்டவில்லை.

இன்னும் இலட்சக்கணக்கானோர் வவுனியா வதைமுகாம்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் ஏதும் செய்யப்படாத நிலையில் அனாதைகளாய் அல்லாடி வருகின்றனர்.

இத்தகைய நிலையில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடித் தப்பித்துச் சென்ற தமிழர்களையும் கடல் பகுதிகளில் சுற்றி வளைத்துத் தாக்குகின்ற கொடுமைகளையும் சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

இந்தியாவுக்கோ அல்லது சர்வதேசச் சமூகத்திற்கோ அச்சப்படாமல், மனிதநேய மரபுகளையும் மதிக்காமல் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்கிற ஈவிரக்கமில்லாத இனவெறியன் ராஜபக்சவின் இந்திய வருகை மேலும் ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

எனவே ராஜபக்சவின் வருகையை எதிர்க்கும் வகையிலும் சிங்கள அரசின் மனிதநேயமற்ற போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் 8Š6Š2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் சென்னையில் எனது தலைமையில் நடைபெறுகிறது.

அந்த அறப்போராட்டத்தில் மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

Exit mobile version