Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரது சகோதரியார் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்திப்பு!

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரது சகோதரியார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்தார். 
 
  புதுவை இரத்தினதுரை அவர்களின் சகோதரியார் தனது கணவனுடன் நேற்று  (26)     அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தனது மனைவி குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தனர். இதன் போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.

இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரியார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்திருந்ததோடு தனது சகோதரனான புதுவை இரத்தினதுரை அவர்களை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும் தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும் அந்த நிலையில் தயா மாஸ்டர் அவர்கள் இன்று வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்திருந்ததோடு புதுவை இரத்தினதுரை அவர்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கைது செய்யப்பட்டோர் சரணடைந்தோர் என படையினரிடம் இருக்கும் அனைத்து புலிகள் இயக்க உறுப்பினர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தாம் ஜனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

 இச்சந்திப்பின் போது ஈ.பி.டி.பி.யின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர்  விந்தன் அவர்களும் புதுவை இரத்தினதுரை அவர்களின் உறவினரும் இலங்கை மக்கள் ஜனநாயகப் பேரவை (சுவிஸ்)யின் செயலாளருமான கே. ராஜ்மோகன் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

Exit mobile version