Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதி- தன்னைப் புகழ்ந்து தானே எழுதிக் கொண்ட கவிதை.

பூகோள படத்தில் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு ஒரு புள்ளியாகக் கூடத் தோன்றாத ஒரு குக்கிராமத்திலிருந்து 87 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த “குவா குவா” எனும் ஒலி வந்த திசையிலிருந்து முத்துவேலர் தோளிலும் -அஞ்சுகத்தம்மையின் மடியிலும் தவழ்ந்த மழலை இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வதோடு; அது கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்த்து; திராவிட இயக்கமெனும் தொட்டிலில் கேட்ட தன்மானத் தாலாட்டை; இந்த வயதிலும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு தேசமெங்கும் திரிந்திடுவதைத் தேனினுமினிய இசையெனக் கொண்டு எங்கெல்லாம் தமிழ் மக்கள் இருக்கிறார்களோ; எங்கெல்லாம் அந்த மக்களின் பழைய வரலாறு பதிந்த கல்லோவியங்கள் உண்டோ; அங்கெல்லாம் “வாழ்க தமிழ்!” “வெல்க தமிழர்!” என முழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆம்; 87 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அந்த எழுச்சி முழக்கம்; இன்றைக்கும் சோர்வு தட்டாமல் இந்தப் பார் மகிழ ஒலித்துக் கொண்டிருக்கிறது! தேரூரும் திருவாரூரிலிருந்து கிளம்பி, திருக்குவளையின் வேரார்ந்த அந்த கீதம்; இன்றைக்கும் அதற்கு வேதம்
!

ஆனால், வேதங்கள், இதிகாச புராணங்களை விரித்துரைத்து மாந்தரிடையே பேதங்களை வளர்த்திடும் போக்கு; பாலப்பருவத்திலேயே அந்த இளைஞனுக்கு பகையான ஒன்று! அதனால்தான் அந்த ஊர் சலவைத் தொழிலாளி பட்டு என்பவரின் பாராட்டும், சீராட்டும் பெற்று வளர்ந்தான் – பாசமுடன் பழகி நட்போடு தொடர்ந்தவர்களோ; பழங்குடி இனத்தினரான ஆதி திராவிட மக்கள்தான்! சிங்கப்பூர் சவுராளி ராமச்சந்திரனின் “பார்பர் ஷாப்” தான் அவனுக்கு பகுத்தறிவுப் பாசறை
!

அவனது பொது வாழ்க்கையின் அதிகாலைப் பருவத்தில் அவன் ஏற்றிய கொடிகளில் பெரும் பாலானவை – அடித்தட்டு மக்கள் வாழ்ந்த தெருக்களில் அல்லது அவர்கள் வீட்டு முகப்புகளிலேதான்
!

அந்த மக்கள் என்றால்தானே நோய் நொடிகளுக்குக் கூட இளக்காரம் -அவர்களை வாட்டும் குறைகளில் ஒன்று; வறுமையை விடக் கொடியது – பார்வையில் ஏற்படும் பழுது; என்பது அவன் மனத்தைப் பாடாய்ப்படுத்தியது
.

காலிழந்த நொண்டியெனில், மற்றவர் தோளில் ஏறிக்கொண்டு நகர முடியும் – பேச இயலாதவர் எனில் எழுதிக்காட்ட முடியும்- காது கேளாதோர்க்கும் அதுவே பொருந்தும், இல்லாவிட்டால் கையால் “ஜாடை” காட்டிட இயலும் – ஆனால் கண் பார்வையற்றோர்; ஒரு காட்சியைப் பிறர் வர்ணிக்கக் கேட்கும்போது கூட; அய்யோ; தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் தாக்கத்தில் தானே ஆழ்வர்
.

அதனால்தான் இயலாதோர்க்கு – ஏழையெளியோர்க்கு – உதவிட வேண்டுமெனில் – வந்துற்ற வாய்ப்பைக் கொண்டு அவர்கட்கு கண்ணில் ஒளி வழங்கிடும் கடமையையே கடவுள் தொண்டெனக் கருதி
;

கண்ணொளி வழங்கும் திட்டத்தைப்

பரவலாக வகுத்தான்
.

அதனைத் தொடர்ந்து இரவலர்

எவரும் இருத்தலாகாது என

உரைத்து அவர்கட்கு மறு வாழ்வு

இல்லங்கள் அமைத்தான்
.

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண அண்ணன்

காட்டிய வழியில் எத்தனையோ

திட்டங்கள் வடித்தான்
.

மாற்றுத் திறனாளிகள்
,

மலம் எடுப்போர்
,

கை ரிக்ஷா இழுப்போர்
,

அரவாணிகள்

என அனைவர்க்கும் மனித உரிமை தந்திட; அவன் தயங்கியதில்லை
.

சமூக நீதிக்காக அணிவகுத்த தந்தை பெரியார் படையில் அவன் ஒரு தளகர்த்தன்
!

ஐந்து முறை மாநிலம் ஆளுகின்ற முதல்-அமைச்சராகவும் – பதினோரு பொதுத் தேர்தல்களில் வென்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் – 50 ஆண்டுகள் சட்டப்பேரவையில் வாழ்வில் ஒரு பகுதியை வழங்கி; தன்னை வளர்த்த அந்த பேரவைக்கு என எழில் மாடத்தை நிறுவி – தமிழ் மக்களுக் கென்றே தன்னை ஒப்படைத்துக் கொண்டவன்

தமிழ் மொழி எங்கும், எதிலும் ஏற்றம் பெறவும் – தமிழர் எத்துறையிலும் வல்லவர், நல்லவர், மிகுந்த அறிவும், மேன்மைசால் ஆற்றலும் உள்ளவர் என எந்நாளும், எந்நாட்டவராலும் போற்றப்படவும்
;

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்

என; தமிழ் அய்யன்மார் படைத்த நெறிகள் பாரெங்கும் பரவிச் செல்லவும், வெல்லவும் -அந்த வெற்றிச் செய்தியை எல்லோரும் சொல்லி; காதாரக் கேட்டுக் களித்திடவும் -இத்திங்கள் இறுதியில் கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துகிறான்! உலகத்தமிழர் அனைவரும் உவகையோடு அதில் கலந்துகொண்டு உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுமென்று நாட்டம்கொள்கிறான்
.

இதோ 87-ல் அடியெடுத்து வைக்கும்போது -அவன் சென்னையில் தாய், தந்தையோடும், தமக்கைகளோடும், மகன்கள், மருமகன்களோடும், பேரன், பேத்திகளோடும் – எத்தனையோ வரலாற்று ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நூலகம் போன்ற இல்லத்தையும் – நடமாடும் கோவில்களின் திருப்பணிக்காக; ஆம்; மாந்தர்தம் நோய் நொடி தீர்க்கும் திருப்பணிக்காக – இதோ பொதுவில் அறக்கட்டளைக்கு ஒப்படைக்கின்றான்
.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சி.கே.ரெங்கநாதன், இயக்குநர் ராமநாராயணன், கவிப்பேரரசு வைரமுத்து, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை நியமித்து இந்த அறக்கட்டளையைத் திறம்பட நடத்திடுவர் என்ற உறுதியோடு இருக்கிறான்
.

கோடியென வந்த சம்பளத்தையும் – குடியிருந்த வீட்டையும் – தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் – உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் – தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்
!

வாழ்க தமிழ்
!

வளர்க திராவிட இன உணர்வு!

Exit mobile version