Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடிதம் எழுதியதையே தமிழுக்குச் செய்த சாதனையாகச் சொல்கிறார் கருணாநிதி- சீமான் அறிக்கை.

 

இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் தம் உடலை வருத்தி உண்ணாநோன்பு இருந்த வழக்கறிஞர் பெருமக்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.அதே நேரத்தில்,காலம் காலமாக அவர்களின் கோரிக்கையை பரீசீலிப்பதாக காலம் கடத்தும் அரசுகள் இந்த முறையும் வெற்று அறிக்கைகளையும்,வாக்குறுதிகளையும் அளித்துள்ளதே தவிர அதனை உறுதியுடனும் உண்மையுடனும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.
தமிழகத்தின் உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழி என்னும் கோரிக்கை காலம் காலமாக வலியுறுத்தப்பட்ட சூழ்நிலையில்,கடந்த 06.12.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்” என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டி பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட ஒப்புதலானது குடியரசுத்தலைவரின் பார்வையில் படாமலேயே திரும்ப அனுப்ப பட்டுள்ளது.கடந்த 4 ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாக தீர்மானம் இருக்கின்றது.தாய் மொழியாம் தமிழ் மொழி நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக இருப்பதற்கு சட்டத்தின் படியும், நியாயத்தின் படியும் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் தேர்வு எழுதும் மாணவர்களில் 95 சதவீதம் பேர் தமிழ்மொழியில் தான் எழுதுகின்றனர் என்று சட்டப்பல்கலைக்கழகமே அறிவித்துள்ளது.நாளைய வழக்குரைஞர்களே தாய்மொழியில் எழுதுவதைத் தான் விரும்புகின்றனர்.மேலும் தன் தாய் மொழியிலேயே எவரொருவரும் தம் வாதங்களை உணர்வு பூர்வமாகவும் தெளிவாகவும் எடுத்து வைக்க முடியும்.இது போக தமிழர்கள் வசிக்கும் நம் நாட்டில் அன்னிய மொழி என்பது தமிழர்களை இழிவு படுத்தும் ஒன்றாகும். அதைப்போலவே சட்ட ரீதியிலும் தமிழ்மொழி அலுவல் மொழியாக்கப்படுவதற்கு முன்னுதாரணம் இருக்கின்றது.இந்திய அரசியல் சாசனத்தின் 348 (2) பிரிவு மர்றும் 1963 ஆம் ஆண்டைய மொழிச்சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை உயர்நீதிமன்றத்தின் அலுவல்மொழியாக அந்தந்த மாநில மொழியைவைத்துக்கொள்ளலாம் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்தி போன்ற தொன்மையற்ற மொழிகள் எல்லாம் 5 மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும்,நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் இருக்கும் பொழுது உலகின் மூத்த மொழியோ இன்று வரை கேட்பாரற்று வீதியில் கிடக்கின்றது இவ்வாறு சட்டப்படியும்,பொது நியதிப்படியும் தமிழை நீதிமன்றத்தில் அலுவல்மொழியாய் வைத்துக்கொள்ள எண்ணற்ற வாதங்கள் இருக்கும் பொழுது மத்திய அரசு இந்த விஷயத்தில் கள்ள மவுனம் காக்கின்றது.தமிழக அரசோ மேலவைக்கும் மத்திய மந்திரி பதவிகளைப் பெறுவதற்கும் காட்டிய அக்கறையில் துளி கூட இதில் செலவிட மறுக்கின்றது.தமிழக சட்ட அமைச்சரோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதுதியதையும்,அறிக்கை விட்டதையும் தனது சாதனையாக்கி அதற்கொரு அறிக்கை விடுகின்றார்.நிறைவேற்ற வேண்டிய காங்கிரஸ் கட்சியின் தங்கபாலுவோ உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தருவதாய் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.ஆனால் தமிழோ இன்னும் அரியணை ஏற முடியாமல் இருக்கின்றது.இந்நிலையில் அறிவார்ந்த எமது வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கிப் போராடி கைதாகி உள்ளனர்.அவர்கள் போராட்டம் இன்றில்லாவிட்டாலும் நாளை வெற்றிபெறும்,அன்னைத்தமிழ் நீதிமன்றத்தில் அரியணையில் அமரும் என்று தெரிவித்துக்கொள்கின்றேன்.

Exit mobile version