ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து,சாம்ராஜ் நகர் மாவட்ட எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி மற்றும் சில கன்னட சங்கங்கள் கர்நாடக–தமிழக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தனியார் பஸ் அதிபர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே திங்கள்கிழமை சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்களை இயக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை மீறி வாகனங்களை இயக்கினால் அவற்றின் முன் மறியல் போராட்டம் நடத்துவோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
