இலங்கையின் இறைமை என்பது நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களினதும் ஏனைய சிறுபான்மை சமூகங்களினதும் ஒட்டுமொத்த இறைமையையே குறிப்பதாகும். அத்தகைய இறைமை மீது அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளின் உள்நோக்கப் பின்புலத்துடன் ஐ.நா. மூலமான தலையீடு இடம் பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு உள்ள ஒரே வழி ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்துள்ள விடயங்களுக்கு அரசாங்கம் அர்த்தமுடைய வகையில் பதில் சொல்லும் கடப்பாட்டை முன்னெடுப்பதேயாகும்.
அதன் மூலமாகவே அமெரிக்க மேற்குல ஏகாதிபத்திய சக்திகளின் உள்நோக்க முயற்சிகளைத் தோற்கடிக்க முடியும்.
இவ்வாறு அமெரிக்க செனட் சபையும் ஐ.நா நிபுணர் குழுவும் இலங்கை அரசாங்கம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகள் பற்றி விவாதித்த புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் மத்திய குழு வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் ஐ.நா சபை உட்பட ஏகாதிபத்திய நவகொலனித்துவ நிறுவனங்களையும், அவற்றின் சட்டங்களையும் வரைபுகளையும் ஏற்றுக் கொண்டு அவற்றின் வாடிக்கை அரசாங்கமாக இருக்கின்றபடியால் அவற்றுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐ.நா சபையும் நாடுகளின் இறைமையில் தலையிடுவது புதிதல்ல. அதனால் அத்தலையீடுகளை ஏற்று அங்கீகரிக்க வேண்டியதில்லை. அத்தலையீடுகளைத் தவிர்க்கவும் எதிர்க்கவும் வேண்டுமாயின் சொந்த நாட்டு மக்களுக்கு அரசாங்கங்கள் நேர்மையாகப் பதில் சொல்லக் கடப்பாடுடையனவாக இருக்க வேண்டும். ஏகாதிபத்திய அரவணைப்பாளர்களாக இருக்கும் நாடுகளின் தலைவர்கள் தமது அடக்குமுறை ஆட்சிக்கு சாதகமாக ஏகாதிபத்தியங்கள் இருக்கும் போது அவற்றை புகழ்வதையும், அடக்குமுறை ஆட்சிக்கு மாறாக அல்லது எதிராக ஏகாதிபத்தியங்கள் செயற்படும் போது அவற்றை எதிர்த்து பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் தேசப்பற்றாளர்களாகவும் காட்டிக் கொள்வதையும் மக்கள் அறிவார்கள். இலங்கை அரசாங்கத்தினாலும், அரச பாதுகாப்புப் பிரிவினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் 2009 மே மாதம் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரச பாதுகாப்புப் படையினருக்குமிடையிலான இறுதிக் கட்ட மோதலில் இலங்கைப் பாதுகாப்புப் படைத்தரப்பில் சர்வதேச மனிதாபிமான சட்டப் பிரமாணங்கள் மீறப்பட்டுள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய அமெரிக்க செனட் சபையும், ஐ.நா. பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவும் தயாரித்த அறிக்கைகள் ஒன்றிற்குப் பின் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதனது தனிநாட்டுக் கோரிக்கையையும் என்றுமே எமது கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அவ்வியக்கம் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டதற்கான அடிப்படைக் காரணம் தமிழ் மக்களின் மீதான பேரினவாத ஒடுக்குமுறையேயாகும். அவ்ஒடுக்குமுறை இன்னும் தொடர்கின்றன என்பதையும் எமது கட்சி வலியுறுத்திக் கூறும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
இலங்கையில் வாழும் தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ணய உரிமை, சமத்துவம், சுயாட்சி என்பவற்றின் அடிப்படையில் பல்லின சமூக ஐக்கியமாகி வாழும் அரச கட்டமைப்பை எமது கட்சி வலியுறுத்தி வருகிறது. அவ்வாறான ஏற்பாடில்லாத போதே தனிநாடு, பிரிவினை போன்றவற்றை நாடும் நிலைமைக்கு அடக்கப்படும் தேசிய இனங்கள் தள்ளப்படுகின்றன என்பதையும் தொடர்ந்து எமது கட்சி சுட்டிக் காட்டி வந்துள்ளது.
இலங்கையைத் தொடர்ந்து ஆண்டு வந்த, வருகின்ற பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களின் இன ஒடுக்கலும், தமிழ் மக்கள் மத்தியிலான பிற்போக்கு, பழமைவாத சக்திகளின் குறுகிய தேசியவாத நிலைப்பாடும் பிரிவினை கோரிக்கையை நியாயப்படுத்த அடிப்படையாக அமைந்தது.
ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகள் தமிழீழப் பிரிவினைக்கு ஆதரவு போல் நாடகமாடி தமிழ் மக்களின் போராட்டத்தைத் திசை திருப்பி, தமது நலனுக்காக அப்போராட்டத்தை நந்திக்கடலில் மூழ்கடிக்க வைத்தனர். இலங்கை பேரினவாத அரசாங்கத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை புரிந்தன. இந்நடவடிக்கையின் பின்னரும் ராஜபக்ஷ அரசைத் தம் வசம் முழுமையாக இழுக்க முடியாமையால் புலம்பெயர்ந்த தமிழ் மேட்டுக்குடியினரின் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டை அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் கொண்டுள்ளன.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளப் போவதாக அச்சுறுத்தி வருகின்றமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கத்தில் அன்றி ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மிரட்டி முழு இலங்கையையும் கபளீகரம் செய்யும் ஏகாதிபத்திய நோக்கத்தையும் கொண்டுள்ளன. ராஜபக்ஷ அரசாங்கம் சிங்கள மக்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேஷத்தைக் கொண்டிருந்தாலும், அது நவகொலனித்துவத்தின் வாடிக்கை அரசாகவே இலங்கையை நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் நிலப் பிரபுத்துவ நிலைப்பாட்டில், ஒன்றான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மறுப்பானது ஏகாதிபத்திய அக்கறைகளுடன் முரண்படுவதையும் தற்போது காணமுடிகிறது. இதில் ராஜபக்ஷவிடம் ஏகாதிபத்திய எதிர்ப்புமில்லை. ஏகாதிபத்தியத்திடம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அக்கறையும் இல்லை.
தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணாமை மட்டுமன்றி, போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்லும் கடப்பாட்டை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்காமையும் இலங்கையில் ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகளின் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க செனட்சபையின் அறிக்கை ஏகாதித்திய நோக்கம் கொண்டதே, நவகொலனித்து அமைப்பான ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்குழு அறிக்கை நவகாலனித்துவ அக்கறை கொண்டதே. ஆனால் அவற்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மொட்டையான மறுப்பு பதிலாகாது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரச படையின் இராணுவ நடவடிக்கையின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லையா, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படவில்லையா, மனித உரிமை மீறல்கள் ஜனநாயக மறுப்புகள் இடம்பெறவில்லையா என்பது பற்றி விரிவான விசாரணைகளை செய்து அறிக்கை செய்யும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது. இல்லாவிட்டால் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களிடம் அடிபணியும் அபாயத்தையே கொண்டுள்ளது.
எனவே அமெரிக்கா, ஐ.நா என்பனவற்றின் பசப்பலுக்கும் இலங்கை அரசாங்கத்தின் மறுப்புக்கும் அப்பால் போர்க்குற்றம், மனித உரிமை மீறல், ஜனநாயக மறுப்பு போன்றவற்றுக்கும் நீதியான விசாரணைக்கு முன் வரவேண்டும். அத்துடன் தேசிய இனங்களுக்கான அதிகாரப் பகிர்விற்கான அரசியல் தீர்வுக்கும் முன் முயற்சிகள் செய்ய வேண்டும். அதுவே அமெரிக்க மேற்குலக அழுத்தங்களையும் தலையீடுகளையும் எதிர்த்து அனைத்து மக்களையும் ஒன்றிணையச் nசெய்வதாகும்.
சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்.