
சோசலிச நாடுகளில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்வதற்கான திட்டங்கள் ஏகாதிபத்திய நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்களைக் சோசலிசப் பொருளாதாரத்தை நோக்கித் திரும்பிப்பார்க்கச் செய்தது.
இதனால் இச் சமூக நலத் திட்டங்கள் தமது நாட்டு மக்களைச் சமாதனப்படுத்தத் தேவையானதாக அமைந்தது. இதற்கான பணத்தின் ஒரு பகுதியை உள் நாட்டு வரியிலிருந்தும் மறு பகுதியை மூன்றாமுலக நாடுகளில் கொள்ளையடிக்கப்படும் பணத்தின் ஒரு பகுதியிலிருந்தும் பெற்றுக்கொண்டன.
சோசலிச நாடுகள் அழிக்கப்பட்ட பின்னர் சமூக நலத் திட்டங்களுக்கான ஒரு பகுதித் தேவை அற்றுப் போனது. திட்டங்களைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கிய அரசுகள் இன்று அவற்றை முற்றாக அழிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இன்னும் சில வருடங்களில் ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கு இணையான வறுமை மிக்க சமூகம் ஒன்று உருவாக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஜேர்மனிய நாஸி அரசுப் பாணியிலான கண்காணிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பிரிதானியாவில் மிக நீண்டகாலமாக வேலையற்றிருப்போரின் தொகை கடந்த 20 வருடங்களில் இந்த அளவிற்கு அதிகமாக இருந்ததில்லை என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அண்ணளவாக ஒரு மில்லியன் உழைக்கும் மக்கள் ஒரு வருடத்திற்கு மேல் வேலையற்றோராக காணப்படுகின்றனர். தமது வாழ்க்கையின் நாளாந்தச் செலவுகளை எதிர்கொள்ள முடியாத மிகப் பெரும் பகுதியானோர் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை வேலையற்றோராகக் கருதாத பிரித்தானிய அரச புள்ளி விபரங்கள் வேலையற்றோர் தொகை வீழ்ச்சிய்டைந்துள்ளதாகப் போலியான தகவல்களை வழங்கி வருகின்றன.