Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்!

ஒக்டோபர் 25, 2010  : கடந்தவாரம் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் மாநகரசபை தேர்தல் தொடர்பான விளம்பரம் ஒன்று ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவ் விளம்பரம் Lesbian & Gay மக்களுக்கும், தற்போது மாநகரசபை முதல்வருக்கு போட்டியிடும் ஜோர்ச் சிமித்தமன் அவர்களுக்கும் எதிராகவுமே வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஒடுக்கு முறைகளுக்;கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் தேடகம் இவ் விளம்பரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழர் மத்தியில் தொடர்ச்சியாக நிலவி வரும் சாதிய, வர்க்க, இன, பெண், பாலியல் அடக்குமுறைக்கு எதிராக

நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம். குறிப்பாக Lesbian & Gay மக்களின் போராட்டங்களுக்கு நாம் எமது ஆதரவை தெரிவித்து வந்திருப்பதோடு, தெற்காசிய Lesbian & Gay அங்கத்தினரின் செயற்பாடுகளில் பங்காற்றியும் வந்திருக்கின்றோம். அனைத்து மக்களும் சமமாக நோக்கப்படவேண்டும், அவர்களது மனிதவுரிமைகள் மதிப்பளிக்கப்படவேண்டும் என கனேடிய சாசனம் வலியுறுத்துகிறது. சமூகத்தில் ஒருவரது பாலியல் தெரிவுக்காக அவரது அனைத்து உரிமையும் மறுக்கப்படுவது மானிடத்துக்கு எதிரானது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் Lesbian & Gay சமூத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், கேலி என்பனவற்றால் பல இளைஞர்கள் தற்கொலை செய்த பரிதாபங்கள் இடம்பெற்றுள்ளன. இன்னமும் தெற்காசிய சமூகத்தில் உள்ள Lesbian & Gay மக்கள் தம்மை மூடி மறைக்கும் நிலையிலேயே உள்ளனர்.

Lesbian & Gay மக்களின் உரிமை குறித்தான விழிப்புணர்வை எம் மத்தியில் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளது. Lesbian & Gay சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் மிகவும் ஆழமாக செயலாற்ற வேண்டிய காலமிது. குறிப்பாக மதத்திற்கூடாக இச் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறை கண்டிக்கப்படவேண்டியது. மனிதத்துவத்தை மேம்படுத்தவே மதம் படைக்கப்பட்டதாக போதிக்கும் சமயவாதிகள் தமது அடிப்படைவாதத்திலிருந்து இன்னமும் மீண்டு வரவில்லை. எல்லாப் படைப்பும் இறைவனது என்று சொல்லிக் கொள்பவர்கள் சமத்துவத்தை பேணுவதில்லை. மதம் என்பது தத்தமது தேவைகளுக்காக மட்டும் பாவிக்கும் ஆயுதமாய் மக்களை அடக்கி ஆளும் தன்மையிலேயே நிலைத்து நிற்கிறது. மனித மேன்மைக்காய், மானுட நீதிக்காய், மானிட சமுத்துவத்துக்காய் எம்மைச் சூழவுள்ள மத எண்ணக் கருத்தோட்டங்களை நாம் கேள்விக்குள்ளாக்கவேண்டிய தேவை இருக்கிறது.

இந்த பிற்போக்குத்தனமான விளம்பரச் செயற்பாட்டுக்கு கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுடன், இவ் விளம்பரத்தால் மனத்தாக்கத்துக்கு உற்படுத்தப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பையும் கோரவேண்டும். ஊடக அறத்தை மீறிய இச் செயற்பாட்டை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த அற்பத்தனமான விளம்பரத்திற்கும், அதன் பின்னால் நின்று செயலாற்றும் பிற்போக்கு வலதுசாரி அரசியலுக்கும் எதிராய் குரல்கொடுக்கும் அனைத்து சக்திகளுடன் நாமும் இணைந்து கொள்ளுகிறோம். நன்றி தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)

Exit mobile version