Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடகவியலாளரின் தவறு : சரத் பொன்சேகா

இலங்கை சிங்கள் பௌத்தர்களின் நாடு; வேண்டுமானால்  சிறுபான்மையினர்  வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று  நாஷனல் போஸ்ட் என்ற கனடாவைச் சார்ந்த பத்திரிகை உட்படப் பல சந்தர்ப்பங்களில்  நேர்காணல் வழங்கியவர் சரத் பொன்சேகா. இவரது இச் செவ்விகளின் பின்னர் பாக்கியசோதி சரவணமுத்துவின் தலைமையிலான சிபிஏ அமைப்பும் நீண்ட கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.இதற்கெல்லாம் எந்தப் பதிலும் கூறாத சரத் பொன்சேகா  இப்போது ஊடகவியலாளர்களைக் குற்றம் கூறுகிறார்.இது தொடர்பான கேள்விக்குப் பின்வருமாறு தெரிவிக்கிறார்:

நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டார். இந்த நாட்டை சிங்களவர்கள் ஆட்சிசெய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. சிறுபான்மை இனத்தையும் இணைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறியிருந்தேன். அத்துடன் அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்தனாகிய நான் சகல மதங்கள், மொழிகள் இனங்களின் கலாசாரத்தை மதிக்கின்றேன் என்பதனால் எவலும் வேறுபாடு இருக்காது.

கே; கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றனவே?

ப; ஆம் ,ஆனால் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்னும் பொறுப்பை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இங்கு வெறுமனே வெறுமைப்படுத்தப்பட்ட பதவியாகும். அந்த பதவிக்காகவும் எனக்காகவும் நாடு பெருந்தொகையான நிதியை செலவிடுகின்றது ஆனால் என்னால் எதுவுமே செய்யமுடியாது.

எவ்விதமான அதிகாரம் இன்றி வேலைகளையும் செய்யாமல் பெருந்தொகையான நிதியை செலவிடுவதற்கு விரும்பவில்லை, நிர்வாகம் தேவை, வேலைசெய்யவேண்டும்.

கே;அன்று சிறுபான்மை இனங்களை பற்றி தவறாக கருத்து தெரிவித்திருந்தீர்களே?

ப; நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டார். இந்த நாட்டை சிங்களவர்கள் ஆட்சிசெய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. சிறுபான்மை இனத்தையும் இணைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறியிருந்தேன். அத்துடன் அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்தனாகிய நான் சகல மதங்கள், மொழிகள் இனங்களின் கலாசாரத்தை மதிக்கின்றேன் என்பதனால் எவலும் வேறுபாடு இருக்காது.

கே; பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

ப; பாதுகாப்பு தொடர்பில் நான் திருப்தி கொள்ளவில்லை. என்மீதே முதலாவது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு அச்சுறுத்தலுக்கு இலக்கான எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான் வீதியில் செல்லும் போது தாக்குதல் நடத்தப்பட்டால் நூற்றுக்கணக்கான பொதுமக்களே பலியாகவேண்டிய நிலைமை ஏற்படும். பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.

கே; ஆயுத கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே?

ப; படைகளுக்காக பல்குழல் பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இதற்கான நிதி விவகாரங்களை பாதுகாப்பு அமைச்சும் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே மேற்கொண்டனர். இராணுவத்தளபதியான நான் தொழில்நுட்ப மதிப்பீட்டை மட்டுமே செய்தேன்.

கே; ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற உங்களால் பெருந்தொகையான நிதியை செலவிடவேண்டிவரும். எனினும் அவ்வாறான பெருந்தொகையை புலிகளுக்கு ஆதரவளித்த சர்வதேச நிறுவனமொன்று ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே?

ப; தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தாலென்ன பிரபாகரனின் பெற்றோர்களானால் என்ன இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென பெருந்தொகையான நிதி தேவைப்படும். எனது ஓய்வூதிய கொடுப்பனவான 50 ஆயிரம் ரூபாவில் அதனை செய்யமுடியாது. காரியாலயங்கள் அமைத்து கூட்டங்களை நடத்தவேண்டும். இளைஞர் யுவதிகள் எனக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன்.

கே; யாழ்ப்பாணத்திலும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா?

ப; என்னால் முடிந்த மட்டில் நான் செய்வேன். அதற்காக “புரம்டர்’ பயன்படுத்தமாட்டேன் பாதுகாப்பு போதாது, பாதுகாப்பு இருந்தால் எங்குவேண்டுமானாலும் சென்று பிரசாரங்களை முன்னெடுப்பேன்.

கே; இந்தியாவுடனான உறவு எவ்வாறு இருக்கின்றது?

ப; நான் இரண்டாவது படைநிலை அதிகாரியாக பதவிவகித்த போது இந்தியாவிற்கு நான்கு தடவைகள் சென்றிருக்கின்றேன். நூறு வீதமல்ல ஆயிரம் வீதம் நல்ல உறவு இருக்கின்றது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தின்போது ஆயுதாரிகளை வழங்கியிருந்தன. ஆனால், மானசீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அயல்நாடான இந்தியா உதவி புரிந்தது.

கே; அரசாங்கத்தில் ஊழல் நிறைந்தது என்கின்றீர்கள். அப்படியாயின் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?

ப; நிச்சயமாக அதனை ஒழிப்பதற்காக நான் நடவடிக்கை எடுப்பேன்.

கே; அரசாங்கத்தின் மீது யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால்?

ப; யுத்தத்தை முன்னெடுத்ததில் நானுமொரு பங்காளி என்பதனால் சரியான தகவல்களை கோருவோம் அவ்வாறு நடந்திருக்குமாயின் அதனை மூடி மறைப்பதற்கு இடமளிக்கமாட்டேன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் .

கே. ஜே.வி.பி., ஐ.தே.க. சந்திப்பில் எதனை கதைத்தீர்கள்?

ப; எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

கே; எந்த கட்சியினர் உங்களை முதலில் சந்தித்தனர்?

ப; யார்? முதலில் சந்தித்தனர் என்பது பிரச்சினையில்லை. அவர்களுக்குள் கலந்துரையாடியதன் பின்னர் ஜே.வி.பி., ஐ.தே.க., ஐக்கிய தேசிய முன்னணியுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

கே; ஜனாதிபதியிடம் நீங்கள் கோரியதற்கு இணங்க பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்திருக்கின்றாரே?

ப; ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எனது பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினேன் அப்போது இருவருக்கும் இடையில் சில விடயங்கள் பேசப்பட்டன. அதனை எழுத்துமூலம் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கேட்டிருந்தார். அதன் பிரகாரம் சமர்ப்பித்திருந்தேன். அந்தக் கடிதத்தையே இராணுவ ஊடகப்பேச்சாளர் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடுகின்றார்.

அந்த நேரத்தில் வேறு படையினரின் தளபதிகளை கூட என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை, எனக்கு கீழிருந்த என்னால் தரயர்த்தப்பட்டவர்களுக்கு கூட பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கே; உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தை எப்போது கையளிப்பீர்கள்?

ப; வாடகைக்கு வீடொன்றை தேடிக்கொண்டிருக்கின்றேன். ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவ்வீட்டு உரிமையாளரை பாதாள உலககோஷ்டியினர் மிரட்டுகின்றனர். எனது அரசியல் காரியாலயத்திற்கு அண்மித்தே வீட்டினை எடுக்கவேண்டும் அதற்கு ஏற்றவகையில் வாடகைவீடொன்று கிடைத்தவுடன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவேன்.

கே; நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ப; லசந்த விக்ரமதுங்க மட்டுமல்லாது கொழும்பில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் எனக்கெதிராக எதிர்காலத்தில் விரல் நீட்டப்படும். இராணுவத்தினர் சீருடையில் இருக்கும் போது ஒழுக்கமாகவே வழிநடத்தப்பட்டனர்.

கே; மதுவுக்கு முற்றுப்புள்ளி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பீர்களா?

ப; மதுபாவனையின் மூலம் ஏற்படும் சௌகரியத்திற்கும் இடமளிக்கவேண்டும், மதுவை அளவாக அருந்தினால் அது சுதந்திரமான கலந்துரையாடலுக்கு வழிசமைக்கும். எனினும் போதைப்பொருள் பாவனையை அழிக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தடைசெய்வேன் என்று கூறுவேனாயின் எனக்கு வாக்குகள் கிடைக்காது.

கே; சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்ன?

ப; பௌத்த விஹாரையில் நடந்தது போல இனியும் நடக்கக்கூடாது, மக்கள் அச்சம் பயமின்றி வாழவேண்டும் ,இராணுவத்தினருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வாறு நடக்கும். ஊர்சுற்றுபவர்கள் மற்றும் பிஸ்டலுடன் இருப்பவர்களுக்கு நாட்டின் சட்டத்தை கையிலெடுக்க விடக்கூடாது.

கே; இராணுவ அதிகாரியான நீங்கள் எவ்வாறு சட்டத்தை அமுல்படுத்தப் போகின்றீர்கள்?

ப; இராணுவச்சட்டம் வேறு மக்கள் மத்தியில் அமுல்படுத்தவேண்டிய சட்டம் வேறு. இராணுவச்சட்டத்தின் கீழிருந்த நான் தற்போது பொதுமக்களின் சட்டத்தின் கீழ் வந்துள்ளேன். பொதுமக்களுக்கான சட்டமே முன்னெடுக்கப்படும்.

Exit mobile version