
இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் ஐ.எம்.எப் இற்கான பொருளாதார உதவியை நிறுத்திவைக்கப்போவதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்த அறிக்கையில் ஐ.எம்.எப் இல் தமது முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத வரை அந்த அமைப்பு வலுவற்றதாகிவிடும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். உலகப் பொருளாதார நெருக்கடி காலத்தின் போது உலகப் பொருளாதாரத்தைக் கையாள்வதில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். கூட்டறிக்கை வெளியான போதும் பிரிக்ஸ் இல் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகள் போன்று தனியாக இந்திய தரப்பிலிருந்து மேற்கு நாடுகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை.
45 வீதமான உலக சனத்தொகையை பிரிக்ஸ் இல் அங்கம் வகிக்கும் நாடுகள் கொண்டிருக்கின்றன. 1.3 ரில்லியன் டொலர் பணம் இவர்களின் இருப்பில் உள்ளது. இந்த நாடுகளின் இருப்பில் உள்ள பணத்தின் தொகை உலகப் பணத்தில் கால்வாசி. உலக வங்கிக்கு இணையான நிறுவனம் ஒன்றை உருவாக்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இணைந்து உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் நிலவுவதாக பிரேசில் தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உலகவங்கியின் இன்றைய அதிபர் ரொபேர்ட் சுவோல்லிக் உலகவங்கியை போன்று பிரிக்ஸ் வங்கி இயங்குவது கடினமான ஒன்று எனக் கருத்துத் தெரிவித்தார்.