Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உண்மையான இராணுவ சூழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகின!

  இலங்கையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இராணுவ சூழ்ச்சி தொடர்பான தகவல்கள் தேர்தலுக்கு முன்னர் வாழைத்தார் வேலிக்கு வெளியே பாய்ந்த கதைக்கு இணையான கதையாகவே உள்ளது. இராணுவ சதித் திட்டம் தொடர்பான உண்மை நிலைமை வெளியாகியிருப்பதாக இராணுவத்திலுள்ள நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வின் வெற்றி தொடர்பில் அச்சமடைந்திருந்த பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி தோல்வியடைந்தால் அந்தத் தோல்வியின் பின்னர் மேற்கொள்ள வேண்டியத் திட்டங்கள் குறித்து நீண்ட நாட்களாக திட்டமிட்டுவந்ததாகவும் அதுகுறித்த இறுதிப் 
 
 
  பேச்சுவார்த்தை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 24ம் திகதி இரவு பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்றதாகவும் தெரியவருகிறது.

முப்படைத் தளபதிகள், காவல்துறைமா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது வடபகுதியில் நிலைகொண்டுள்ள ஐந்து விசேட படையணிகளை கொழும்பிற்கு வரவழைத்துள்ளனர்.

இவற்றின் கட்டளை அதிகாரியாக வெற்றிலைக்கேணி விசேடப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றும் லெப்டினன் கேர்ணல் ஹரேந்திர வனசிங்க பயன்படுத்தப்பட்டுள்ளார். இவர் முன்னாள் இராணுவத் தளபதியான எமில்டன் வனசிங்கவின் புதல்வராவார்.

இந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு தெரிவித்து நிட்டம்புவ கூட்டத்தில் கலந்துகொண்டதும் இந்த சதித் திட்டத்தின் ஒருபகுதியென இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசேட படையணியினரிடம் காணப்படும் தாக்குதல் திறன் காரணமாகவே அவர்களைக் கொழும்பிற்கு அழைக்க பாதுகாப்புச் சபை தீர்மானித்திருந்தது.

இந்தப் படைப் பிரிவைத் தவிர கஜபா மற்றும் கனரக ஆயுதப்படையணி என்பன தனித்தனியான திட்டங்களுக்குப் பயன்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அழைக்கப்பட்டிருந்த படைப் பிரிவுகள் எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சீதுவ, குருவிட்ட, அம்பிலிபிட்டிய, பாணந்துறை, கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் ஆகிய இடங்களில் நிலை நிறுத்தப்பட்டிருந்ததுடன் திடீர் தாக்குதலை மேற்கொள்வதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதல் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டிருந்தார். இந்த இராணுவப் படையணிகளுக்கு மேலதிகமாக எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளும் வகையில் விமானப்படையினர் மற்றும் கடற்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

தேர்தலில் தோல்வியடைந்தால் ஏற்படும் மக்கள் எழுச்சியைத் தடுத்து இராணுவத் தளபதியின் தலைமையில் இராணுவ அரசாங்கமொன்றை நிறுவதற்காகவே இந்தத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. சரத் பொன்சேக்காவிற்கு சார்பான சிங்கப்படைப் பிரிவு மற்றும் கமாண்டோ படைப் பிரிவினர் இந்த மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கினால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தக் கூடிய சிறந்த படையணியான விசேடப் படையணி என்பதால் அவர்களது தாக்குதல் திறன்மூலம் எந்தவொரு நிலைமையையும் சமாளித்து இரத்தம் சிந்தியேனும் அரச அதிகாரத்தைத் தக்கவைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் குறித்து அறிந்துகொண்ட முன்னாள் இராணுவப் பிரதானிகள் மற்றும் பணியில் இருக்கும் அதிகாரிகள் லெப்டினன் கேர்ணல் ஹரேந்திர வனசிங்கவைத் தொடர்புகொண்டு இவ்வாறான நிலைமை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதிலும் தான் இராணுவுத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டளைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் மற்றும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள் பலர் இந்த சதித் திட்டம் குறித்து நன்கு அறிந்திருந்ததாகவும் இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தமையே இவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான காரணமாகும்.

அத்துடன், இவர்கள் மீது சதித் திட்டம் தீட்டியமைக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடிய சாட்சியங்களைக் கண்டறிய விசாரணைக் குழுக்கள் தவறியுள்ளன. அதேவேளை, இராணுவத்தின் சிங்கப் படைப் பிரிவைக் கலைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் 60 வருடகால வரலாற்றில் ஏற்படாத வகையில் பிளவுகளை ஏற்படுத்தியமைக்கான பொறுப்பு தற்போதைய இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவையும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச வையுமே சாரும் என இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

Exit mobile version