Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். -மன்மோகன்சிங் சந்திப்பு.

 

இலங்கை பிரச்சினை சம்பந்தமாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் இந்திய பிரதமர்   மன்மோகன்சிங் அவர்களை சந்தித்து ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையினை சமர்ப்பித்து விவாதித்தனர்.
இந்தச் சந்திப்பிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலருமான   இரா. அன்பரசு அவர்கள் ஏற்பாடு செய்து, இந்த விவாதத்திலும் கலந்துகொண்டார்.
  பிரதமர்  மன்மோகன்சிங் அவர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் கீழ்வருமாறு:
(01) “இந்திய – இலங்கை” ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

(02) இலங்கை அரசு “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை அனுபவரீதியாக நாங்கள் கண்டுள்ளோம்.

எனவே இந்தியா ஒரு படையை அனுப்புவதன் மூலமாகத்தான் ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியும் என்று கருதுகிறோம்.

(03) இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது.
தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது.
(உதாரணம்) திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர்.
 
இதனை தடுத்து நிறுத்தவோ, சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோருகிறோம்.
(04) வடக்கு மாகாணத்தில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றரை லட்சம் தமிழர்களை நிபந்தனை எதுவும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் தங்களது பகுதியில் குடியமர இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

 

(05) தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு கல்வியும், தொழில்; வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்களின் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
நேற்று நடந்த சந்திப்பின் போது நடந்த பேச்சுவார்த்தையில், பிரதமர் மன்மோகன் சிங்   ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) க்கு கீழ்கண்டவாறு உறுதிமொழியழித்துள்ளதாக ஈ.என்.டி.எல்.எப். பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
(01) இந்திய-இலங்கை ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

 

(02) வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

(03) அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாங்கள் 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். மேலும் அதற்கான உதவித் தொகைகளை கொடுப்போம். மீளக்குடியேற்றங்களையும் நேரடியாக அவதானித்து வருகிறோம்.

 

(04) தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான கல்வியும், தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும்.

 

(05) நிச்சயமாக ஈழத் தமிழர்களுக்கு ஒரு நல்லத் தீர்வினை இந்தியா ஏற்படுத்திக் கொடுக்கும்.

Exit mobile version