Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை விஷயத்தில் மத்தியஸ்தராகவோ அல்லது அனுசரணையாளராகவோ பங்காற்ற தாங்கள் முயலவில்லை ….இப்ராஹிம் இப்ராஹிம் தெரிவித்தார்.

இலங்கை வந்து அரச தரப்புடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் தென்னாப்பிரிக்க குழு, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வதிலே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவதுதான் வழியாகத் தெரிகிறது என்று கூறியுள்ளது.அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த எட்டு மாதங்களாக தடைபட்டுள்ள நிலையிலேயே தென்னாப்பிரிக்காவின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.தடைபட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க தென்னாப்பிரிக்கா அனுசரணையாளராக இருக்க முன்வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
ஆனால் இலங்கை விஷயத்தில் மத்தியஸ்தராகவோ அல்லது அனுசரணையாளராகவோ பங்காற்ற தாங்கள் முயலவில்லை என்று தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசுக்கும் தமக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத சூழலில், ஒரு மூன்றாம் தரப்பு அனுசரணையாளரின் உதவி இன்றியமையாதது என்றும் அதை கூட்டமைப்பு வரவேற்கிறது எனவும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

இலங்கை சென்ற தென்னாப்பிரிக்க குழுவினர் அரச தரப்பையும், கூட்டமைப்பினரையும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் போது இருதரப்புமே தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தாங்கள் அறிந்து கொண்டாதாக இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பினரும் வர வேண்டும் என்றும், அதன் மூலமே தீர்வு காண முடியும் எனவும் அரசு கூறுகிறது.

கூட்டமைப்போ அரசுக்கும் தமக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்ட பிறகு தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யலாம் என்று கூறுகிறது.

இதன் காரணமாகவே பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

அரச தரப்பிடம் பேசிய பிறகு இரண்டாவது முறையாக கூட்டமைப்பினரை தாங்கள் சந்தித்து பேசிய போது அவர்கள் தெரிவுக் குழுவில் பங்கேற்பது என்கிற யோசனையை பரிசீலனை செய்வது போலத் தோன்றுகிறது என பிபிசியிடம் கூறினார் தென்னாப்பிரிக்க அமைச்சர் இப்ராஹிம்.

Exit mobile version