இந்திய பெருமுதலாளிகளுள் ஒருவராகி விட்ட தன் குடும்பத்தினருக்காகவும் கட்சி பிரமுகர்களுக்காகவும் இலங்கை அரசுடன் வர்த்தக நலனகளை மேம்படுத்துவதற்கான வாய்புகளை கருணாநிதி குழுவினர் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீனவர் படுகொலைகளைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக்கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவனின் உச்சக் கட்ட காமெடிப் பேச்சின் சாராம்சம் இது, மீனவர் செல்லப்பன் சமீபத்தில் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்த தாக்குதல் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.கடந்த 5 வருடமாக தமிழக மீனவர்கள் 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வர் கருணாநிதியை கலந்து பேசிதான் கையெழுத்திட வேண்டும்.இதுவரை 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதுபற்றி முதல்வர் கருணாநிதியுடன் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகம் இழுத்து மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை அனுமதிக்க கூடாது என்றும் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஐ.நா. சபையையே எதிர்க்கிற இலங்கை அரசின் தூதரங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களை திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என்று திருமா பேசினார். இந்தப் பேச்சின் மூலம் கருணாநிதிக்கு எதுவுமே தெரியாது தெரிந்தால் தண்ணீர் குடித்து தலை கீழாக நின்று தண்டால் எடுத்து விடுவார் என்பது போல திருமா பேசியிருக்கிறார். சென்னையில் விழா ஒன்றில் பேசிய மன்மோகன் மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் கருணாநிதியை கலந்து பேசாமல் எதையும் செய்வதில்லை என்று சென்னையிலேயே குறிப்பிட்டது குறிப்பிடத் தக்கது.