Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வாழ்கின்றனர் :சமூகவிரோதியின் கருத்து

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய
பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய

இலங்கையை தெற்காசியாவின் இஸ்ரேலாக மாற்றும் திட்டம் ஏகாதிபத்திய நாடுகளிடமிருப்பதாக 2009 இனப்படுகொலைக்குச் சற்று முற்பட்ட காலப்பகுதியில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். அச்ச உணர்வை ஏற்படுத்தியே இஸ்ரேல் அதிகாரவர்க்கம் தனது மக்களை நச்சூட்டி ஒருங்கிணைத்துள்ளது. இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் இதனை ஒத்த போக்கினைக் கடைப்பிடிக்கிறது. நோர்வே மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நிதி வழங்கலில் வேர்விட்டுள்ள அமைப்பான பொதுபல சேனா என்ற அமைப்பின் செயலாளர் ஞாரராச தேரர், இஸ்ரேலைப் போல் இலங்கையும் ஒரே ஒரு இனத்தைக் கொண்ட நாடு. இஸ்ரேலில் யூதர்களும் இலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்று கூறியுள்ளார். பிரித்தானிய அமெரிக்க இராணுவக் கட்டமைப்புக்களால் பயிற்றுவிக்கப்பட்ட கோட்டாபய ரஜபக்சவினால் வழிநடத்தப்படும் பொது பல சேனாவின் நோக்கம் இலங்கையில் இன்னொரு இரத்தக்களரியை ஏற்படுத்துவதே.

குருநாகல் சாலி யாலவர்தனாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஞானராச தேரர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்,

“சர்வமத அமைப்புக்களால் நன்மையில்லை. பெளத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவே நாம் உண்மையான திட்டங்களை வகுத்து வருகின்றோம். இலங்கை என்ற சிங்களத் தீவில் 70 சதவீதமாக நாம் வாழ்கின்றோம். ஆயினும் தெற்காசிய வலயத்தை எடுத்துக் எடுத்துக் கொண்டால் நாம் வெறும் மழைக் குமிழி அளவிலேயே உள்ளோம். சிங்கள மொழி பேசும் இனத்தவருக்கு உலகிலுள்ள ஒரேயொரு நாடு இலங்கையாகும். எமக்கென வேறு நாடுகள் இல்லை.” என ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேலும் “இந்த நாட்டை வளப்படுத்திய வரலாற்றுப் புகழ் மிக்க இனத்தை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பதை இனவாதம் என்று அர்த்தப்படுத்தினால் அவ்வாறானவர்களை அங்கொடைக்கு அல்லது முல்லேரியாவுக்கு அனுப்பி வைத்து மூளையை பரிசோதிக்க வேண்டும்.

நாம் போடும் திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று நடத்தும் சிவில் அமைப்புக்களே குழப்புகின்றனர்.

உலகிலேயே இஸ்ரேலிலும் இலங்கையிலும் தான் ஒரே ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர்.
தென்னத் தோப்புக்களில் இடையிடையே வாழைச் செடிகளும் கடுகுச் செடிகளும் செழிப்பாக வளர்ந்தாலும் அதனை தென்னந்தோப்பு என்று தான் சொல்லுவோம். வேறு பெயர்கள் கொண்டு அதனை அழைப்பதில்லை.

உலகிலேயே பௌத்தர்களை அழிப்பதற்காக சதித் திட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டங்களை நாடுபூராகவும் உள்ள அடிப்படை வாத இயக்கங்களே மேற்கொண்டு வருகின்றன.

சில அடிப்படைவாத குழுக்கள் பௌத்தர்களை திட்டமிட்டு சூட்சுமமாக துஷ்பிரயோகப் படுத்தி அழிக்கின்றனர் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version