ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதினொரு தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆசிரியர்கள் இவ்வாறு சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட உள்ளனர்.
நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், தேசிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பதினொரு தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்காத காரணத்தினால் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கையின் புகையிரத பணியாளர்கள் இன்று அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த வரவு செலவுத்திட்டத்தில் தமக்கு உரிய சம்பள உயர்வுத்திட்டங்கள் அறிவிக்கப்படாமையை கண்டித்தே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக நாளை காலை புகையிரத சேவையில் ஸ்தம்பித நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நிலைமையை சமாளிக்க தாம் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.