இலங்கை அரசை மனித உரிமை மீறல்களுக்காக பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சித்து, ஓரிரு தினங்களில் அந்த நாட்டின் கலாசார ஊடகத்துறை இணையமைச்சர்
இலங்கைக்கு கிறிஸ்மஸ் விடுமுறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளமையை மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் இலங்கை அடுத்த பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்துவதைத் தடுத்து நிறுத்தினார். அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கடந்த வாரம் பொதுச்சபையில் இலங்கை நிலைவரம் குறித்துக் கவலை தெரிவித்தார்.
எனினும், பிரிட்டனின் கலாசார ஊடகப் பிரதிமைச்சர் பென் பிரிட்சோ வெள்ளிக்கிழமை இலங்கைக்கு உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரிட்டனின் உல்லாசப் பயணத்துறை இணை அமைச்சராகவும் உள்ள பிரிட்சோ இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதன் மூலம் ஏன் அந்த நாட்டிற்கு ஆதரவளிக்கின்றார் என மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
தமிழ் மக்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைத்திருக்கின்றமையைக் கண்டித்து பிரிட்சோ பகிரங்க அறிக்கை யொன்றை வெளியிட வேண்டுமென சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.