பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது;
பாதுகாப்பு செலவீனம் தொடர்பாக சபையில் பேசப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்தில் 209 பில்லியனில் 88 வீதம் அதாவது 184 பில்லியன் ரூபாயைத்தான் பாதுகாப்புக்குச் செலவிடுகிறோம். பாதுகாப்புச் செலவீனம் என்னும் போது மீள்குடியேற்றம், கண்ணிவெடியகற்றல், கொழும்பு நகர அபிவிருத்தி போன்றவைகளும் உள்ளடங்கியவை என்பதை மறந்துவிடக் கூடாது.
தேசிய பாதுகாப்புக் கருதியே நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத முதலீடாக பாதுகாப்புச் செலவீனத்தைக் கருத முடியும். அதன் காரணமாக எந்த வகையிலும் பாதுகாப்புச் செலவீனத்தை குறைக்க முடியாது.
2010 ஆம் ஆண்டு சமாதான ஆண்டாகும்.அதனை மேலும் பேணிக் கொள்வதாயின் பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கப்படத் தான் வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு நான் திட்டமிட்டிருந்தேன். அதன் மூலமாக எமது திட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும். அதனைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு எமது நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனர்.
அத்துடன் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதன் ஒரு வெளிப்பாடே. ஆனால் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுரிமை அளித்திருக்கின்றோம்.
இதேவேளை, இராணுவத்திற்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இராணுவத்திற்குள் சந்தேகத்தை தோற்றுவித்து பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்யாதீர்கள் என நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
சிலர் தாம் விரும்புவதை எங்களுக்கூடாகச் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.
நீதிமன்றக் கட்டமைப்பை சர்வதேசமயப்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். அரசாங்கம் அதற்கு ஒருபோதும் இடமளிக்காது. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை தொடர்ச்சியாக பேணப்படும்.
இலங்கை மண்ணில் கால்வைத்திராத சிலர் இலங்கையைப் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றப் பார்க்கின்றனர்.அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.