Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தமிழர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கினால் நீதிமன்ற நடவடிக்கை : சுப்ரமணியம் சுவாமி

_swamy_தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது சவாலான விடயம் எனவும், அவ்வாறு குடியுரிமை வழங்கப்படும் பட்சத்தில், இந்தியாவில் பதுங்கியுள்ள எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அதனை வழங்கப்பட வேண்டியேற்படும் அபாயம் இருப்பதாக ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு. கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சுப்ரமணியம் சுவாமி இதனை தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்காக அவர் காலை முதல் பகல் வரையிலான நடிப்பு உண்ணாவிரத போராட்டத்தினால் சாதிக்க முடியாததை இந்த கருத்தை கொண்டு சாதிக்க முயல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக, தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முதலமைச்சர் முயற்சிப்பதாக சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் நிலைகொள்ளும் போது, அவர்களை தகர்க்க முடியாது என்ற அடிப்படையில் எஞ்சியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வறிய நிலையை அடைந்துவிட்ட திராவிட கழகத்தின் தலைவர் கீ. வீரமணியும், தமிழக முதலமைச்சரும் புலி உறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான முன்னெடுப்புக்கு ஐக்கிய அரசாங்கம் இடமளிக்குமானால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version