Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை இடைநிறுத்தம்

eu_flagஇதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு இரண்டுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சலுகைத் திட்டத்தை நீட்டிப்பதற்கு தேவையான முக்கிய நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கிறிஸ்டியன் ஹோமான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை சர்வதேச மனித உரிமை சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சில நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கைக்கான சலுகைத் திட்ட நீட்டிப்பை இரண்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கையுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுவர் உரிமைகள், சித்திரவதை சட்டங்கள் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச சட்டங்களே அதிகளவில் மீறப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version