Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா அதிகரித்தது:உளவுத்துறையோடு புலம்பெயர் அமைப்புக்கள்

lankanweaponsபிரித்தானிய அரசின் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அதிகரிக்கப்படுள்ளது. இலங்கையில் ‘மனித உரிமை மீறல்’ தொடர்பாகக் கவலைகொள்வதாகக் கூறும் பிரித்தானிய அரசு இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. 8.9 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த பிரித்தானியா இப்போது அதனை 49.6 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. மொத்தத் தொகையாக 6.14 வீதம் மேலதிக ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு 79 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய அரசோடும் அதன் உளவுத் துறையோடும் முதுகெலும்பற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உல்லாசமாய் உலாவரும் நிலையில் இந்த ஆயுதவிற்பனை தங்கு தடையின்றி நடைபெறுகின்றது. இலங்கை இனக்கொலை அரசு தனது இனச் சுத்திகரிப்பைத் தொடர்கிறது. பௌத்த சிங்கள மயமாக்கலும், திட்டமிட்ட குடியேற்றங்களும், பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலும் நாளாந்தச் செய்திகளாகிவிட்ட சூழலில் பிரித்தானிய அரசின் ஆயுதங்கள் இனச்சுத்திகரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

உலகில் அதிவேகமாக இராணுவ மயப்படுத்தப்படும் நாடுகளில் இலங்கை பிரதான இடத்திலுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணைய உரிமையை மறுத்து அப்பாவி மக்கள் மீது வெறித்தனமான தாக்குதல்களை நடத்திவரும் இனக்கொலை பாசிஸ்டுக்களின் உறைவிடமான இலங்கைக்கு வன்னிப்படுகொலைகளின் போதும் பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்தது. இது குறித்து பில் மில்லர் அண்மையில் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து ஈழம் பிடித்துத் தருவதாக மக்களை ஏமாற்றும் அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் திருடன் போலிஸ் விளையாடுவதற்குப் பதிலாக ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி போராட்டங்களை நடதாமை குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.

Exit mobile version