Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு:இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில்.

தமிழர்களுக்கு எதிராக “போர்க்குற்றங்கள்’ புரிந்ததாக கொழும்பு மீது ஐரோப்பா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கின்றன.

இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு நாளை புதன்கிழமை வரை நீடிக்கப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய விசேட அமர்வொன்றை நடத்துவதற்கு பேரவையிலுள்ள 47 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களின் கையெழுத்தை டென்மார்க் பெற்றுள்ள நிலையில், இந்த அமர்வு நடத்துவது சாத்தியமாகியுள்ளது.

விசேட அமர்வை கூட்டுவதாயின் குறைந்தது 16 உறுப்பினர்களின் கையெழுத்து தேவையாகும்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதையும் அதன் தலைமைத்துவத்திலிருந்து குறைந்தது ஒரு பகுதியையாவது காப்பாற்றுவதற்கும் மேற்குலகின் ஒரு பகுதியினர் முயற்சித்திருந்ததாக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கைத் தூதுவரும் விசேட பிரதிநிதியுமான தயான் ஜயதிலக குற்றம் சாட்டியதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

“”தோல்வி கண்டுள்ள நிலையில், இது (விசேட அமர்வு) தண்டிப்பதற்கான நடவடிக்கையாகும்’ என்று தொலைபேசி மூலமான பேட்டியில் தயான் ஜயதிலக ஐ.ஏ.என்.எஸ். சேவைக்கு கூறியுள்ளார்.

சில மேற்கு நாடுகளில் புலிகள் கணிசமான அளவு போஷிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தலிபான், அல்கைதாவுக்கு இதேமாதிரியான அந்தஸ்த்தை அந்நாடுகள் வழங்கியதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவுதி அரேபியா, நிக்கர குவா, பொலிவியா மற்றும் ஏனைய நட்பு நாடுகளின் உதவியுடன் எந்தத் தீர்மானத்தையும் இலங்கையால் தோற்கடிக்கமுடியுமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாதச் சந்தையில் பெரியளவிலான பெயர்களை கொண்டிருந்தவற்றில் ஒன்றை இலங்கை அழித்தமைக்காக உலகம் இலங்கைக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் அந்தத்தருணத்தில் இலங்கையை இவ்வாறு இழுந்துவிட்டிருப்பது கவலைக்குரியது என்றும் ஜயதிலக கூறியுள்ளார். “தமது சொந்த நாடுகளில் இராணுவ மயமாக்கும் பேச்சுகளுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் அபாயகரமான விளையாட்டை அவர்கள் விளையாடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். ஐரோப்பாவையும் புலிகள் சார்வு தமிழர்கள் பற்றியும் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

விசேட அமர்வுகான தனது பாதையில் ஐரோப்பா செல்லுமானால், இலங்கையின் உணர்வுகளை அது கடினமானதாக்கியிருப்பதுடன் அரசியல் ரீதியான இடத்தினை சுருக்கிவிடும் என்றும் ஆழமான எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version