Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனியும் யுத்தத்தை இந்த அரசு விற்பனை செய்ய முடியாது : ரணில்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தில் கட்சியின் தவிசா ளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், பௌத்த மத குருமார்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.

இங்கு ரணில் விக்கிரமசிங்க மேலும் பேசுகையில் கூறியதாவது;

யுத்த முன்னெடுப்பின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வண்ணமுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் நிவாரண உதவிகளை அரசாங்கம் உரிய முறையில் வழங்க வேண்டும், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதில் நாம் திடமாகவுள்ளோம். அதேவேளை நீண்டகாலமாக சமாதானமொன்றை அரசு ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வான அரசியல் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

யுத்தத்தை அடுத்து ஏற்படும் பொருளாதார யுத்தத்துக்கும் உணவுப் பட்டினிக்கும் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளையும் ஊழல்களையும் வெளிப்படுத்த ஊடகங்கள் செயற்படுகின்றபோது அவ்வூடகங்களுக்கு எதிராக தடைகளையும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வேலைகளையும் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இது வரைக்கும் 53 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியும் நாட்டை விட்டும் வெளியேறியுமுள்ளனர்.

இனியும் யுத்தத்தை இந்த அரசு விற்பனை செய்ய முடியாது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்துக்கு ஊடகம் ஆற்றும் பங்கு அளப்பரியது.

முல்லைத்தீவில் இருந்து வரும் மக்களுக்கு வழங்கவென ஐ.தே.கட்சி நிவாரணப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.

Exit mobile version