Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அக்கறையில்லை : இந்தியா

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையே முன்வைக்க வேண்டும். அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எந்தவொரு தீர்வு தொடர்பிலும் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்கப்போவதில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும். இலங்கையும் இந்தியாவும் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர் சொன்னார். இலங்கையிலிருந்தும் புதுடில்லி வந்துள்ள தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சு கட்டடத்தில் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில், “இலங்கையும் இந்தியாவும் பிராந்திய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. அந்த வகையில், பயங்கரவாதம் இன்று ஒழிக்கப்பட்டுள்ளது. புலிகளால் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா பிரதமரையே இழந்தது. இலங்கை, இந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம். இலங்கை தனது இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டியது அதன் கடமை. நாம் தேவையெனில் ஆதரவளிப்போம்; உதவிகளை வழங்குவோம். ஆனõல், இது தான் தீர்வு, இதனை அமுல்படுத்துங்கள் என்று ஒருபோதும் வலியுறுத்த மாட்டோம். இலங்கை இறைமையுடைய நாடு. எம்மிடையேயான உறவு மிகவும் விசுவாசமும் உறுதியும் கொண்டது. சிலர் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலம் இந்தியாவால் முன்வைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அது தவறான கருத்து, 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையால் முன்வைக்கப்பட்டதாகும். எனவே, அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களைப் பொறுத்த விடயம். நாம் இதைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. ஏன் ஐ.நாவோ, நோர்வேயோ, அமெரிக்காவோ கூட இது தான் தீர்வு என்று வலியுறுத்த முடியாது.

இலங்கையும் இந்தியாவும் ஜனநாயக நாடுகள். பல்லின மக்கள் வாழும் நாடுகள், ஒரே வகையான கலாசாரத்தைக் கொண்ட நாடு. எனவே, இருநாடுகளும் இனி எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும்” என்றார். அதேவேளை, இந்தியாவின் யுத்தத்தையேதான் முன்னெடுத்ததாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரே? என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சிவ்சங்கர் மேனன், “பயங்கரவாதத்தால் இருநாடுகளும் பாதிக்கப்பட்டன. எங்கள் பிரதமரும் புலிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன” என்று பதிலளித்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டில்லியில் தங்கியுள்ளதாகவும், தற்பொழுது இலங்கை விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version