Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலை – இலங்கையுடன் இணைந்து செயற்பட்ட இந்தியா : ராஜா

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட்டமையாலேயே, போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அண்டைநாடான இந்தியா அமைதி காக்கிறது

என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் அறிய வருகையில்;

இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவிக்கப்பட்ட போரில், இலங்கை அரசுக்கு ஆயுத பலம், பண பலத்தை அளித்தது இந்தியா. இந்தியாவின் ஆதரவில்லாமல் இப்போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதியே தெரிவித்திருந்தார். இதனால், இந்தியாவும் இப்போது சர்வதேச அரங்கில் குற்றவாளி கூண்டில் நிற்கிறது.

இந் நிலையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை எந்த இடத்திலும் மறுத்திராத இந்தியா, போர்குற்றம் தொடர்பில் மெளனம் சாதிப்பதற்கான காரணம் என்ன?. தமிழர்களுக்கு எதிரான இந்த போரில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது எனச் சொல்லப்படும் கருத்துக்களுக்கு இந்தியாவின் பதில் என்ன?

போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசும், விடுதலைப் புலிகளுமே காரணம் என்றும், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. போரில் தமிழர்கள் கொல்லப்பட்டது படுகொலை சம்பவம் என சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அன்டை நடான இந்தியா இலங்கையின் இந்தச் செயலை ஒருபோதும் கண்டிக்கவில்லை. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை என்பதனாற்தானா இந்த மௌனம் ?

இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கான இந்தியாவின் பதில் என்ன?

இலங்கை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் கருத்தை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொண்டதில்லை. அதெவேளை இலங்கை பிரச்சனையில் தீர்வு காண இந்தியா எப்பொதும் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள டி.ராஜா இலங்கைத் தமிழர் விவவகாரத்தில் இந்தியா பொறுப்பான வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் செய்தித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Exit mobile version