Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மீனவர் தாக்குதல் : நாளை ராமேஸ்வரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து நாளை 25ஆம் திகதி அதிமுக சார்பில் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

“இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தொடங்கினர்.

சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அண்மையில் 21 தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழக மீனவர்கள் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்துக்கு மேலாகியும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலைமை நீடிக்குமேயானால், மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படும். மத்திய அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில், நாளை வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version