Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடம்பெயர் முகாம்கள் குறித்து தமிழகக் குழு பாராட்டு!

இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளைத் தமிழகத்திலிருந்து வந்துள்ள திமுக -காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு பாராட்டியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியில் தெரிவித்ததாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த இஒகூ செய்தியில்,

“தமிழகத்திலிருந்து வந்துள்ள பத்து பேர் கொண்ட குழுவினர் வவுனியாவில் உள்ல நலன்புரி மையங்களுக்கு விஜயம் செய்தனர்.

அதிபர் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்தக் குழுவின் பிரதிநிதிகள், நலன்புரி மையங்களில் உள்ளோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாராட்டினர்.

மேலும் இந்த மையங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

தங்களது ஐந்து நாள் பயணத்தின்போது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களையும் இந்தக் குழுவினர் பார்வையிடவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

வெளியுறவு அமைச்சர் கருத்து

இதற்கிடையே தமிழகக் குழுவினரின் விஜயம் குறித்து வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகொல்லகம கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ராஜபக்ஷ மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழகக் குழுவினரின் வருகை அமைந்துள்ளது.

இலங்கை அரசின் உள்ளூர் மற்றும் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக உள்ளதை சர்வதேச சமுதாயம் பாராட்டி வருகிறது.

எனவே, சர்வதேச இராணுவ நீதிமன்றிலோ அல்லது விசாரணைக் குழு முன்போ இலங்கைத் தலைவர்களை நிறுத்துவதோ அல்லது இராணுவ வீரர்களை நிறுத்துவதோ இயலாத காரியமாகும்.

இதுதொடர்பான எந்தச் சட்ட ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடவில்லை. 2002ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்தது. ஆனால் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் கையெழுத்திட மறுத்து விட்டார்.

ஆனால் அப்படி ஒன்று நடந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை சர்வதேச சமுதாயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க இப்போது, இராணுவ நீதிமன்றில் இலங்கைத் தலைவர்களை நிறுத்த வேண்டும் என்கிறார். இப்படிக் கூறியுள்ளதன் மூலம், நமது வீரர்களை அவர் அவமதித்து விட்டார்.

கடந்த எட்டு தேர்தல்களில் அதிபர் ராஜபக்ஷ தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் போகும் பாதை சரியானதே என்பது நிரூபணமாகியுள்ளது.

அவரது நடவடிக்கைளை மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். இது தென் மாகாணத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது” என்றார்.

Exit mobile version