Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடம்பெயர்ந்தோரில் ஒருவாரத்தில் பாம்புக்கடியால் 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி.

16.10.2008.

வன்னியில் பாம்புக்கடிக்கு இலக்காகி கடந்த ஒரு வாரத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 120 பேர் தர்மபுரத்தில் இயங்கும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாம்புக்கடிக்கிலக்கான 53 வயதுப் பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உதவி சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பிரைட்டன் தெரிவித்துள்ளார்.

பாம்புக்கடி மற்றும் வயிற்றோட்டம் ஆகியவற்றுக்கான மருந்துப் பொருட்களை ஏற்றிய மூன்று லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாக இன்னும் வன்னிக்கு வந்து சேரவில்லை. அத்துடன், வவுனியாவுக்கு நோயாளிகளை அம்புலன்ஸ்களில் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 நாள் குழந்தை ஒன்றுக்கு ஏற்பட்ட நோயை அடுத்து அதனை வவுனியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தபோதும் அது தோல்வியடைந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள கிளிநொச்சி வைத்திய சாலைக்கு நாளொன்றுக்கு 300 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். வெளிநோயாளர் பிரிவுக்கு சுமார் 1,200 பேர் வரை வந்து செல்கின்றனர். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற முடியாமையால் வைத்தியசாலையின் தரைகளிலும் நடைபாதைகளிலும் தங்கியுள்ளனர்.

புளியம்பொக்கணை, விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோருக்கு உரிய கழிப்பறை வசதிகள் இல்லை என தன்னார்வ நிறுவன தரப்புகள் தெரிவித்துள்ளன.

இடம்பெயர்ந்துள்ளவர்களில் 50 பேருக்கு ஒருவருக்கு வயிற்றோட்ட நோய் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தோருக்கான குடிநீர் விநியோகத்தில் 5 தண்ணீர் பௌசர்களே ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலான மக்களுக்கு “எக்ஸிமா’ போன்ற தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், நீர் தொடர்பான நோய்களும் தொற்றியுள்ளன.

நாளொன்றுக்கு 10க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் இடம்பெறுகின்றன. அண்மையில் வாகன விபத்தினால் சிறுமி ஒருவர் பலியானார். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கிளிநொச்சிக்கு சுமார் 10 ஆயிரம் கூடாரங்கள் தேவைப்படுவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version