Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆண்டாண்டுகளகத் தொடரும் ஜெயா – சசி வருமன வரி மோசடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Jeya_Sasiவருமான வரி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா இன்றும் ஆஜராகவில்லை. இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா மீதான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு இன்று எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை கடந்த 1991 -92, 1992-93 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை. 1993- 94ம் ஆண்டுக்கு, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமானங்களுக்கான ஆவணங்களையும் வருமான வரி துறையிடம் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரி துறையினர், கடந்த 1996ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும், சசிகலாவும் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்பின், தங்களை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இருவரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்பாக, கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது.
சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, ஏப்ரல் பத்தாம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை, வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு, ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், வழக்கை முடிப்பதற்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால அவகாசம் போதாது எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேலும் கால அவகாசம் பெறப்பட்டது. அந்த உத்தரவை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜெயலலிதா தரப்பினர், தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை வழக்கை ஒத்திவக்கும்படி கோரினர். அதன்படி வழக்கு மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் எப்போது நேரில் ஆஜராக வேண்டுமென்பது அப்போது முடிவுசெய்யப்படும் என நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
மக்களின் சொத்தைச் சூறையாடும் தமிழக அரசியல் வாதிகளில் முதலிடம் ஜெயலலிதாவிற்கே. இப்போது தமிழ் இனத்தின் பெயரால் ஜெயலலிதா சுறையாடலை ஆரம்பித்துள்ளார்.

Exit mobile version