
இன்று பிரித்தானியாவில் நடைபெறும் அரச குடும்ப திருமண நிகழ்வு பெரும் பணச் செலவில் கொண்டாடப்படுகிறது. திருமண நிகழ்வை ஒட்டிய சம்பவங்களால் பிரித்தானிய அரசிற்கு ஐந்து பில்லியன் ஸ்ரேளிங் பவுண்ஸ் கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பில்லியன் பவுண்ஸ்களை சேமிக்கும் நோக்கில், லண்டன் மாநகரிலிருந்து வேலையற்றோரையும், வறியவர்களையும் வெளியேற்றும் தீர்மானத்தை கடந்தமாதம் பிரித்தானிய அரசு நிறைவேற்றியிருந்தது. மருத்துவ உதவித்தொகை, சுகாதார சேவை, கல்வித்துறை, அரச ஊழியர்களுக்கான ஊதியம் ஆகிய பிரித்தானிய மக்கள் போராடிப்பெற்ற உரிமைகளை பிரித்தானிய அரசு அழித்தொழித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தக் கேளிக்கை நடைபெறுகிறது.
முன்னைய அரச குடும்ப ஆடம்பரக் கேளிக்கைகளிலிருந்து இம் முறை பாரிய வேறுபாடு ஒன்றைப் பலரும் அவதானிக்கின்றனர். 40 வீதமான பிரித்தானியர்கள் அரச குடும்பத் திருமணத்தை விட அந்த நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதையே மகிழ்ச்சியானதாகக் கருதுவதாகக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் வலது சாரிப் பத்திரிகையான ரெலிகிராப் உழைக்கும் மக்கள் திருமண வைபவத்தில் ஆர்வமற்ரவர்களாகக் காணப்படுகின்றனர் என வெளிப்ப்டையாகவே ஒத்துக்கொள்கிறது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் ஏற்படும் மாற்றம் பலராலும் அவதானிக்கப்படுகின்றது.