Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்காவும் பிரிதானியாவும் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டன : PPT

pptஇத்தாலிய நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ( Permanent Peoples’ Tribunal(PPT)) இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் முடிவை இன்று வெளியிட்டது. வல்லுனர்களதும், நேரடிச் சாட்சிகளதும் சாட்சிகளை நான்கு நாட்களாகக் கருத்தில் கொண்ட தீர்பாயம் இறுதியில் இலங்கை அரசு இனப்படுகொலக் குற்றவாளியாகத் தீர்பளித்தது. தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாகவும் அது இன்றும் பல வழிகளில் தொடர்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

இலங்கை இராணுவம் இவ்வாறான இனப்படுகொலையத் தனித்து நின்று நடத்துவதற்கு பலமற்ற நிலையிலேயே காணப்பட்டதாகவும், பிரித்தானியா, அமரிக்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடனேயே படுகொலைகள் நடத்தப்பட்டதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. பிரித்தானியா மற்றும் அமெரிக்க அரசுகள் இனவழிப்பிற்கு நேரடியான உடந்தையாக இருந்தமை உறுதியான முடிவு என்ற போதும் இந்திய அரசின் பங்களிப்புக் குறித்து நிர்ணயிப்பதற்கு மேலதிக தகவல்கள் தேவை என்றும் கூறப்பட்டது.

இலங்கைக்கு உதவிசெய்வதில் பிரித்தானியாவின் வரலாற்றுப் பாத்திரம், ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு பிரித்தானியா வழங்கிய உதவிகள், இனக்கொலையாளிகளைப் பாதுகாக்க பிரித்தானியா மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியனவும் விவாதிக்கப்பட்டன.
அமரிக்க அரச இராணுவத்திற்கும் இலங்கை அரச இராணுவத்திற்குமான உறவுகளும் உதவிகளும் இலங்கை அரசின் இனப்படுகொலை நிகழ்த்தும் திறனை அதிகப்படுத்தியதாக நீதிபதிகள் தீர்பளித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை ஈழத் தமிழர்கழைப் பாதுகாக்கத் தவறியது. ஐநா அவையும் இனவழிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

இலங்கைத் தமிழர்கள் தனி நபர்களாக அன்றி அவர்களது அடையாளத்தை அழிக்கும் வகையில் குழுக்களாகவே இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டனர் என மேலும் கூறப்பட்டது.

இனப்படுகொலை நடைபெற்ற வேளையில் அமெரிக்க, பிரித்தானிய, இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும் ஐந்தாம் படைகளாகவும் செயற்பட்ட தமிழர் தலைமைகளுக்கு மக்கள் தீர்ப்புக் கூறும் பொருத்தமான காலம் இதுவாகும். டேவிட் கமரனைப் பிரதமராகக் கொண்ட பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு 2013 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பெரும் தொகையான ஆயுதங்களை விற்பனை செய்ய அனுமதியளித்தது.

பிரித்தானிய ரோரிக் கட்சி மற்றும் தொழிற்கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களே தமிழர்களின் அரசியல் அமைப்புக்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்றனர். ரோரிக் கட்சியின் முக்கிய தமிழ் உறுப்பினர்கள் பலர் இலங்கையில் பொது நலவாய மாநாட்டை நடத்தி ராஜபக்சவிற்குத் தலைமைப் பதவியை வழங்குவதின் பின்னணியில் செயற்பட்டனர் என்ற ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ள ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு, ரொரிக் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பு, தொழிற் கட்சிகான தமிழர்கள் அமைப்பு போன்ற பல அமைப்புக்கள் இனப்படுகொலைக்கு நேரடியாகவும் துணை சென்றவர்கள் என்பதை இத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
இனப்படுகொலையை பின்னணியில் நின்று நடத்திய இந்த நாடுகளின் பதிலிகள்(Proxy) போன்று செயற்பட்ட, இன்றும் செயற்படுகின்ற தமிழர்கள் ராஜபக்ச அரசின் நண்பர்களே.

உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் மக்களுக்காக உறுதியுடன் போராடும் மக்களில் பெரும்பாலானவர்கள் அமரிக்கா, பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். தமிழ் மக்கள் இவ்வாறான அரசுகளின் பக்கம் என்று கூறி அவர்களை போராடும் மக்கள் பிரிவினரிடமிருந்து தனிமைப்படுத்தி இனப்படுகொலையை மேலும் தீவிரப்படுத்திய ஏகாதிபத்திய ஆதரவு தமிழ் அமைப்புக்கள் தாம் பேரினவாதத்திற்கு எதிரானவர்கள் என்று கூறுவது போலித்தனம் மிக்கது.

தீர்பாயத்தின் முடிவுகளை உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதும் 30 வருடங்களாக எதிரிகளாக்கப்பட்ட நண்பர்களை உருவாக்கிக்கொள்வதும் எமது இன்றைய கடமை.

தாம் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாகச் செயற்படுகிறோம் என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் நாடுகடந்த அரசின் ‘வெளிநாட்டமைச்சர்’ : 

Exit mobile version