வன்னிப் போர் தின்ற இடங்களில் ஒன்றான கேப்பாபிலவு முல்லைத் தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம். இங்கு கேப்பாபிலவு, சூரிபுரம் அண்மித்த காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் சிறிய இரக விமானங்களின் இறங்குதுறை காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மக்களுடன் பேசிய படையினர் முன்னர் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை, மக்களுடைய நலனுக்காக புனரமைக்கப்படுவதாகவும், அதற்காக 5 ஏக்கர் நிலம் தேவை எனவும், அந்த நிலத்திற்குரிய மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என கூறியுள்ளனர். மற்றைய மக்கள் மீதமாகவுள்ள 245 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யலாம். ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலமாகும் என கூறியிருக்கின்றனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இராணுவ மயமாக்கலும் நிலப்பறிப்பும் தொடர்கிறது. இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டவும் போராடவும் அரசியல் தலைமைகள் இல்லை. பிரபாகரன் வாழ்கிறார் என்றும் புலிகள் மீள்வார்கள் என்றும் மக்களுக்கு அனாவசிய நம்பிக்கைகளை வழங்கி அவர்கள் மத்தியிலிருந்து போராட்டங்கள் ஆரம்பிப்பதைத் தடுத்து வரும் தனி நபர்களும் குழுக்களும் இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பின் பின்னணியில் செயற்படுகின்றன.