இரணைமடு நீர் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் விசமிகளுக்கு கிளிநொச்சி விவசாய அமைப்புக்கள் அடையாள உண்ணாவிரத்தத்தில் பலத்த கண்டனம்
யாழ்ப்பாணத்திற்காக இரணைமடுவில் இருந்து நீர் விநியோகம் செய்யும் திட்டத்தை அமுல்படுத்த முனைந்து அதற்கு எதிராக கிளிநொச்சியின் விவசாயிகள் நீர் விநியோகத் திட்டத்தின் பின்னால் உள்ள சுயநல சூட்சுமத்தை அறிந்து எதிர்ப்புக்களை பல்வேறு வழிமுறைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திவந்த நிலையில், இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் மாவட்ட வடமாகாண மற்றும் இத்திட்டத்தின் நிதி வழங்குநர்களான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.
முற்றுமுழுதாக விவசாயத்தை நம்பி தம் வாழ்க்கையை நகர்த்தும் கிளிநொச்சி கமக்காரர்கள் மற்றும் வடமாகாணத்திலுள்ள புத்திஜீவிகள் துறைசார் விற்பன்னர்களின் ஆரோக்கியமான கருத்ததாடல்களில் பின்னால் யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு நீர் விநியோகத் திட்டத்தால் கிளிநொச்சி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் உணரப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் கொள்ளை இலாபம் உழைக்க நினைக்கும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பதவிகளில் இருக்கும் அரச ஊழியர்கள் அரச ஊடகங்ளோடு இணைந்து இந்த நீர் திட்டத்தை நிறைவேற்ற கிளிநொச்சி மக்களை துரோகிகளாகவும் பிரதேசவாதிகளாகவும் சித்தரித்து வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் விளம்பரங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்திவரும் நிலையில், கிளிநொச்சி விவசாய அமைப்புக்கள் ஒன்று திரண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் இரணைமடு நீர் விநியோகத்தை நிறுத்தக்கோரி மீண்டும் தமது தெளிவான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இங்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்றவற்றின் செயற்பாடுகள் மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபையின் அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர்களான ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை தலைவர் நா.குகராஜா, கமக்கார அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
அவர்கள் தமது கருத்துக்களில்,
யாழ்ப்பாண மக்களையும் கிளிநொச்சி மக்களையும் பிரித்தாள்வதற்காக செய்யப்படுகின்ற அரச கைக்கூலிகளின் நஞ்சு எண்ணங்களை வன்மையாக கண்டித்தனர்.
அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவரும் கடும் வறட்சி காரணமாக ஏராள கிராமங்களில் காணப்படுகின்ற நீர் பற்றாக்குறைகளை மூடிமறைத்து வலிந்து யாழ்ப்பாண மக்களையும் கிளிநொச்சி மக்களையும் பகைவர்கள் ஆக்குவதற்கு மோசமான முறையில் ஊடகங்களில் விளம்பரங்களை மேற்கொண்டுவரும் அரசகைக்கூலிகள் தொடர்பாக வடமாகாணமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் படி வேண்டுகோள் விடப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சி மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கி அவர்களை கையேந்திகளாக மாற்றி ஏழை மண்ணாக வன்னி மண்ணை மாற்ற நினைப்பவர்கள் இந்த நீர் திட்டம் நிறைவேற்றப்படுமானால் அதற்கு அதிராக உயிர்கொடுக்கும் சூழ்நிலையும் ஏற்படுமென அடித்துரைக்கப்பட்டது.
விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல இரணைமடு நீர் விநியோகத்தை நிறைவேற்றி தமது பணப்பைகளை நிரப்ப நினைப்பவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கமக்காரர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.