மட்டக்களப்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி நிதி உதவிகளை வழங்க உள்ளது. இதற்கென சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு மட்டக்களப்பில் முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டியைத் நடாத்துவது குறித்தான சாத்தியங்களை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் கண்டறிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கில் விளையாட்டுத்துறை அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் முதலமைச்சர் பிள்ளையானும், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹிஸ்புல்லாவும் வரைவுத்திட்டமொன்றை தயாரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் காணப்படுவதாகவும் அவர்களை நல்ல முறையில் பயன்படுத்த முடியும் எனவும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன்,சச்சின், இம்ரான்கான்……………..இப்படி எத்தனையோ திறமைசாலிகள் இலைமறைகாயாக வடகிழக்கில் உள்ளார்கள். இப்படியான செயற்பாடுகள் நமது திறமைசாலிகளுக்கு ஒரு புதிய களத்தை அமைத்துக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.