12.09.2008.
பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான சுரங்கப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அந்த பாதை மூடப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான பேர் பயணிக்க முடியாமல் சிக்கல்களை எதிர்கொண்டுவருகிறார்கள்.
கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்களுக்கான சுரங்கப்பாதையில் வியாழக்கிழமை தீப்பிடித்தது. இதில் வேதிப்பொருட்கள் நிரம்பிய லாரியை சுமந்துகொண்டு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் எரிந்து சாம்பலானது.
இந்த தீயானது, 16 மணிகளுக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்தது.
இதன் காரணமாக எதிர் எதிர்தரப்பில் செல்லும் ஒருவழி சுரங்கப்பாதைகள் இரண்டிலும் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.
அதேசமயம் தெற்கத்திய சுரங்கப்பாதையில் தற்போது சோதனை செய்துவருவதாக தெரிவித்திருக்கும் ஈரோடனல் நிறுவனம், இந்த குறிப்பிட்ட சுரங்கப் பாதை தீவிபத்தில் பாதிக்கப்படவில்லை என்று நம்புவதாக தெரிவித்துள்ளது