இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க இலங்கை அதிபர் ராஜபச்சேவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இக்கோரிக்கையை டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முகாம்களில் உள்ள 47 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய – இலங்கை அரசுகள் கூட்டுத் திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய அரசு தனிப்பட முறையில், இடம் பெயர்ந்த தமிழர் குடும்பங்களை மறுகுடியமர்த்தி, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ராஜபக்சேவிடம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், அங்கு வாழும் அனைத்து சிறுபான்மையினரும், குறிப்பாக தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தல் தெரிவத்துள்ளார். ஆனால் இந்தியா ஈழத் தமிழர் நலன் தொடர்பாகவோ அரசியல் ரீதியாக இனப் பிரச்சனைக்கு முடிவு காண்பது தொடர்பாகவோ எவ்வித அழுத்தங்களையும் தரவில்லை என்று இலங்கை அரசு நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.