26.09.2008.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நிர்வாக பதவிகளில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மானிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான பனிப்போர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இதுவரையில் பிரதித் தலைவர் பொறுப்பை வகித்து வந்த பிள்ளையானுக்கு பதிலாக ஜெயம் மாஸ்டரை பிரதித் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கட்சியில் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் ஒருவர் முதலமைச்சரின் செயலாளராக கடமையாற்றுவது குறித்து கட்சி வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கட்சியில் உட்பூசல்களை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த நபரை செயலாளராக விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நியமித்துள்ளதாக கட்சியின் சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
http://www.globaltamilnews.com