இறுதிகட்டப் போரின் போது இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களுக்கு கொண்டுவரப்பட்ட மக்களில் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் பணம் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாகவும், வேறு சிலர் பாதுகாப்புத் தரப்பினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் வவுனியா முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவிற்கு வந்த மக்கள் எண்ணிக்கையில் சுமார் 10 ஆயிரம் பேர் வரையிலானோர் தற்போது முகாம்களில் இல்லையென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு மதிப்பீட்டின் புள்ளி விபரத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், வவுனியா முகாம்களிலிருந்த பத்தாயிரம் பேர் வரையில் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லைவும், அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுத்து பலர் தப்பிச் சென்றுள்ளதாகத் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யும் வாகனங்களில் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். மேலும், சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கி தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும். சிலர் விசாரணை என்ற பெயரில் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்களின் விபரங்கள் எதுவும் பதியப்படுவதில்லையெனவும் முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.