2009 -ல் ஈழத்தில் இனக்கொலை நடத்தி முடிக்கப்பட்ட பேரினவாதப் போர் முடிந்த அதே மே மாதத்தில் மீண்டும் துவங்கியது காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம். இந்தியாவின் சுதந்திர வரலாற்றின் காலத்தையொத்த நீண்ட வாரலாற்றைக் கொண்ட காஷ்மீரில் சில ஆண்டுகளாக போராட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நிலோபர் ஜான் (22), அவரது மைத்துனி ஆசியா ஜான் (17) ஆகியோர் மே 30-ஆம் தியதி ஆப்பிள் தோட்டம் ஒன்றில் பிணமாக கண்டெடுக்கப்பட இப்பெண்களை பாலியல் வன்முறை செய்து கொலை செய்தது இந்திய இராணுவம்தான் என்றார்கள் காஷ்மீர் மக்கள். இந்தியாவும் அதன் நீதி மனமும் காஷ்மீரிகளின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை. விளைவு காஷ்மீர் மாநிலம் முழுக்க கிளர்ந்த மக்கள் போராட்டம் அதன் முழு வடிவத்தையும் எட்டியுள்ளது. காஷ்மீரிகள் விடுதலைப் போராட்டத்தை ஒரு பக்கம் இராணுவ அடக்குமுறைகள் மூலம் அடக்கி ஒடுக்க இந்தியா நினைத்தாலும் மக்கள் அதையும் மீறி தொடர் போராடங்களில் ஈடுபடுகின்றனர். பின்னர் இந்து, முஸ்லீம் கலவரமாக சித்தரிக்க முனைந்த இந்தியாவின் தந்திரமும் எடுபடவில்லை. இப்போது இந்துப் பண்டிட்களை தூண்டி விட்டு காஷ்மீர் மக்களுக்கு எதிராக காய் நகர்த்துகிறது இந்தியா. ஆனால் சுமார் ஒரு வருடங்களையும் கடந்து விட்ட நிலையில் மேலும் மேலும் போராட்டம் தீவீரமடைகிறதே தவிற குறைந்தபாடில்லை. இந்த இரு மாதங்களில் மட்டும் சுமார் 60 பேர் இந்தியப் படைகளால் கொலை செய்யப்பட்ட பின்னரும் காஷ்மீர் முழுக்க மக்கள் பெருந்திரள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கல், தடிகள், கம்புகளைக் கொண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.சோபியான், சோப்பூர், தாங்க்மார்க், சௌரா, நௌவாட்டா, ஷபி மண்டி உள்ளிட்ட இடங்களில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டங்களை நடத்தினர். மேலும் மேலும் இந்தியாவின் ஆதிக்கக் கரங்களுக்கு சவாலாக காஷ்மீர் எழுந்து கொண்டிருக்கிறது.