இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள எண்ணெய்வள ஆய்வு தொடர்பான உடன்படிக்கைக்கு சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கையை ரத்துச் செய்யாவிட்டால், யுத்த உதவிகளை நிறுத்த போவதாக அச்சுறுத்தியுள்ளதாகவும் ஞாயிறு இதழான லங்கா இரிதா சஞ்சிகை தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான எண்ணெய் வள ஆய்வுக்கான ஒப்பந்தம் குறித்து சீனா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படாவிட்டால் இலங்கைக்கு வழங்கி வரும் அனைத்து யுத்த உதவிகளும் நிறுத்தப்படும் என சீனா அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் பெற்றோலிய எண்ணெய் வள ஆய்வுக்கான உடன்படிக்கையில் கடந்த 7 ஆம் திகதி இந்திய – இலங்கை பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர். முன்னர் மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ள சீன மிகவும் ஆவலக இருந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டில் மாத்திரம் சீனா – இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு 37.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான போர் தளப்பாடங்களை வழங்கியிருந்தது. இதற்கு மேலதிகமாக இந்த வருடம் ஜெயின் 7 தாக்குதல் விமானங்கள், ஜே.வை – 113டி ரேடார் கட்டமைப்பு, விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை இலங்கைக்கு வழங்கும் உடன்படிக்கையில் சீனா கையெழுத்திட்டிருந்தது. அத்துடன் 2007 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையானது, வருடாந்தம் ஜப்பான் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிகளை விட அதிகமாகும். இதனை தவிர சீனா- இலங்கை நட்புறக்கான கலையகம் ஒன்றை கொழும்பில் அமைக்கவும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிதியுதவிகளையும் சீனா வழங்கியுள்ளது. அத்துடன் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கான 85 வீத நிதியுதவிகளையும் சீனாவே வழங்க முன்வந்துள்ளது. மன்னார் வளைக்குடா பகுதியில் எண்ணெய்வள ஆய்வுகளை நோக்காக கொண்டே சீனா இந்த உதவிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த முயற்சியை முறியடிக்க இந்தியா உடனடியான தலையீடுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் விடுதலைப்புலிகளை போர் மூலம் தோற்கடிப்பதற்கான உதவிகளை சீனாவும் பாகிஸ்தானும் செய்து வந்த வேளை அதனை கடுமையாக எதிர்த்த இந்தியா, கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றிய பின்னர் அங்கு தேர்தலை நடத்துமாறும், அதன் பின்னர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு இந்தியா இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பாதுகாத்து தரும் நிபந்தனையில் இந்தியா மன்னார் வளைக்குடா பகுதியின் எண்ணெய் வள ஆய்வுக்கான தம்வசம் பெற்றுக்கொண்டுள்ளதாக லங்கா இரிதா சஞ்சிகை தெரிவித்துள்ளது