இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைமைகள் குறித்து திருப்தியடைய முடியாதென ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தசாப்த காலமாக நீடித்த யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜனநாயக விழுமியங்களை கட்டிக்காத்தல், சட்டம் ஒழுங்களை நிலைநாட்டுதல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் முனைப்பு போதுமானதல்ல என ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சமாதானத்தை வென்றெடுப்பதனைக் காட்டிலும் யுத்தத்தை வென்றெடுப்பது சுலபமானதாகவே நோக்கப்படுகிறது.
மனித உரிமை மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான வகையில் விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் சுமார் 34 ஊடகவியலளார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்களத் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், ஜனநாயக ரீதியிலான ஆட்சியை முன்னெடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.