இந்தியக் குடிமக்களில் 80% பேர் வறுமைக்கோட்டிற்குக் கிழே வாழ்கிறவர்கள். புதிய பொருளாதாரக் கொள்கை என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் தாராளமயமாக்கல் மக்களை மேலும் வறுமையின் விளிம்பில் தள்ளியுள்ளது. மக்கள் பிரதிநிகள் என்று சொல்லி பாராளுமன்றம் செல்கிறவர்களோ பெரும்பாலானோர் பிரபலங்களின் கோடீஸ்வர வாரிசுகளாகவும் பணக்காரர்களாகவும் இருக்கும் நிலையில் அடிக்கிற கொள்ளைக்கு மேலாக இவர்கள் ஊதியம் போதாதென்று வேறு குரல் கொடுக்கிறார்காள். எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் அலுவலகப் படி மற்றும் தொகுதிப்படி ஒவ்வொன்றையும் தலா 5 ஆயிரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இனி மாதந்தோறும் அலுவலகப்படி ரூ. 45 ஆயிரமும், தொகுதிப் படி ரூ.45 ஆயிரமும் கிடைக்கும்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. படிகள் மேலும் 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளதால் இனிமேல் ஒவ்வொரு எம்.பி.யும் சம்பளம் மற்றும் படியை சேர்த்து மாதம் 1.40 லட்சம் பெறுவர். அண்மையில் எம்.பி.க்களின் சம்பளம் 16 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு மாதமும் அலுவலகச் செலவாக வழங்கப்பட்டு வந்த 20 ஆயிரத்தை 40 ஆயிரமாகவும், தொகுதிப் படியாக வழங்கப்பட்டு வந்த 20 ஆயிரத்தை 40 ஆயிரமாகவும் உயர்த்தியது. அரசு அறிவித்த ஊதிய உயர்வு போதாது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போர்க் கொடி தூக்கினர். நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைக்கு ஏற்ப மாதச் சம்பளம் மட்டும் 80 ஆயிரம் வழங்க வேண்டும். அதுதவிர படிகளும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தனர். குறிப்பாக அரசு செயலர்களுக்கு அளிக்கும் சம்பளத்தைவிட ( 80 ஆயிரம்) தங்களுக்கு கூடுதலாக 1 உயர்த்தி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் எம்.பி.க்களின் சம்பளத்தை 80 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இருப்பினும் எம்.பி.க்கள் சம்பள உயர்வு, படி உயர்வு தொடர்பாக தொடர்ந்து போர்க்கொடி தூக்கி மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வந்தனர். இதனால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இதையடுத்து எம்.பி.க்களின் அலுவலக மற்றும் தொகுதிப் படியை மேலும் தலா 5 ஆயிரம், அதாவது மொத்தம் 10 ஆயிரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.க்கள் தனிப்பட்ட முறையில் வாகனம் வாங்குவதற்கு 1 லட்சம் வரையில் வட்டியில்லாத கடன் வழங்கப்பட்டு வந்தது. இது 4 லட்சமாக ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல சாலை வழியாக எம்.பி.க்கள் வாகனங்களில் செல்லும் ஒரு கிலோமீட்டருக்கு 13 வழங்கப்பட்டு வந்தது. இது 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.